மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் செயல்பாடுகள் "முற்றிலும் அபத்தமானவை" என முன்னாள் கேப்டனும் தேர்வாளருமான கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார். முக்கியமாக, ஹர்திக் பாண்டியாவை 7வது இடத்தில் களமிறக்கியதற்காக அவர் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகத்தை விமர்சித்தார். அகமதாபாத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா,நான்கு ஓவர்களில் 20/3 எனத் தடுமாறியது. டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்களும், டேவால்ட் ப்ரெவிஸ் 29 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி 51 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அணியை மீட்டனர். இறுதியாக, தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் முதலே சறுக்கல் ஏற்பட்டது. மார்க்ரம் வீசிய பவர்பிளே ஓவரில் இஷான் கிஷன் 4 பந்துகளில் டக் அவுட் ஆனார். மார்கோ ஜான்சென் இரு விக்கெட் எடுக்க, அபிஷேக் சர்மா 15 ரன்களில் வெளியேற, இந்தியா 26/3 என சரிந்தது. சிவம் தூபே 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தாலும், இந்தியா 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த் "இது முற்றிலும் அபத்தமானது. இந்தியா இன்று அனைத்து வகையிலும் அவமானப்படுத்தப்பட்டது. எதிரணிகளுக்கு நாம் வழக்கமாக செய்வதை இன்று தென்னாப்பிரிக்கா நமக்கு செய்துவிட்டது. ஹர்திக் பாண்டியா 5வது இடத்தில் களமிறங்கி நெருக்கடியான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் 5வது இடத்தில் வந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவரை 7வது இடத்துக்கு அனுப்பியது முற்றிலும் அநீதியானது. 7வது இடத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்கியது முற்றிலும் அபத்தமான முடிவெடுக்கும் செயல்” என்று கூறினார்.
"இஷான் கிஷன் முந்தைய பந்தில் மிட்-ஆன் திசையில் கிட்டத்தட்ட அவுட் ஆகியிருப்பார். அப்படியிருந்தும் அடுத்த பந்திலும் அவர் பெரிய ஷாட் அடிக்கிறார். அடுத்த பெரிய ஷாட் அடிப்பது அவசியமா? ரிங்கு சிங் எந்த இடத்தில் பேட் செய்ய வந்தாலும் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுக்கிறார். ஐசிசி தொடர்களில் விளையாடுவதை விட இருதரப்பு தொடர்களில் விளையாடுவது எளிது. பேட்ஸ்மேன்கள் இனி தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும்." என்று சாடினார்.
"இந்திய பேட்ஸ்மேன்களின் மனநிலை மேலும் எதிர்மறையாக மாறும். தொடர் முழுவதும் இந்தியாவின் பேட்டிங் சீராக இல்லை. ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது, அதுவும் இந்தப் போட்டியில் கைவிட்டுப் போனது. சிவம் தூபே இறுதியில் சில சிக்ஸர்களை அடித்தார், ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு அவை அனைத்தும் வெறும் சக்கைகள் மட்டுமே என்று குறிப்பிட்டார்.
இந்த படுதோல்வியால் இந்திய அணி சூப்பர்-8 சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அடுத்து வரும் போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு வாய்ப்பு உள்ளது.