ஜொகன்னஸ்பர்க்: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தனது பிறந்தநாளன்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளதால், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மிக முக்கிய காரணமாக அமைந்தார். 2.5 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் குல்தீப் யாதவ்.

2வது டி20 போட்டியில் நம்பர் 1 டி20 பவுலரான ரவி பிஷ்னாயை பெஞ்ச் செய்து குல்தீப் யாதவை களமிறக்கியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த போட்டியில் எந்த லெந்தில் பந்துவீசுவதென்று புரியாமல் குல்தீப் யாதவ் கொஞ்சம் திணறினார். ஆனால் அடுத்த போட்டியிலேயே அனைத்தையும் சரி செய்து, மரண மாஸ் கம்பேக்கை நிகழ்த்தியுள்ளார்.
அதிலும் பிறந்தநாளன்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனக்கு தானே பிறந்தநாளை பரிசை கொடுத்து கொண்டுள்ளார் குல்தீப் யாதவ். பிறந்தநாளன்று குல்தீப் யாதவ் அபாரமாக விளையாடியதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுவதோடு வாழ்த்தும் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் பிறந்தநாளன்று விளையாடிய வீரர்களில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இலங்கை அணியின் ஹசரங்கா 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிரான 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதேபோல் இம்ரான் தாஹிர் 2014ஆம் ஆண்டு அவரது பிறந்தநாளன்று நெதர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
குல்தீப் யாதவின் இந்த ஆட்டத்தின் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஸ்பின்னர்கள் ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். ஏற்கனவே டி20 தரவரிசையில் ரவி பிஷ்னாய் முதலிடத்தில் இருப்பதால், இவருக்கும் பிஷ்னாய்-க்கும் இடையில் தான் போட்டி இருப்பதாக பார்க்கப்பட்டது. இதனால் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் இவர்கள் இருவரின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.