ராஞ்சி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாகச் சென்றது. கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை, குல்தீப் யாதவ் வீசிய அந்த ஒரு ஓவர் காப்பாற்றியது. அவர் எடுத்த இரண்டு முக்கிய விக்கெட்டுகள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 349 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆனால், அதன் பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது.

மார்கோ ஜான்சன் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களைப் பந்தாடியது. 6-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 97 ரன்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. குறிப்பாக ஜான்சன் 39 பந்துகளில் 70 ரன்கள் விளாசி மிரட்டினார். பிரீட்ஸ்கே 72 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்திய அணி தோல்வியடைவது கிட்டத்தட்ட உறுதி என்ற நிலை உருவானது. அப்போதுதான் குல்தீப் யாதவ் தனது சுழல் ஜாலத்தைக் காட்டினார். 33.1-வது ஓவரில், ருத்ர தாண்டவம் ஆடிய மார்கோ ஜான்சனை, ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார். அதே ஓவரின் 3-வது பந்தில் (33.3), மறுமுனையில் செட் பேட்ஸ்மேனாக இருந்த மேத்யூ பிரீட்ஸ்கேவையும் விராட் கோலியிடம் கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார்.
ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்திய குல்தீப் யாதவ், ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். அந்த ஓவரில் மட்டும் விக்கெட் விழாமல் இருந்திருந்தால், தென்னாப்பிரிக்கா எளிதாக வென்றிருக்கும். அதன் பின்னர் கார்பின் போஷ் அரைசதம் அடித்தும் பயனில்லாமல் போனது.
குல்தீப் யாதவ் மொத்தம் 10 ஓவர்கள் வீசி 68 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டோனி டி சோர்ஸி மற்றும் பிரெனலன் சுப்ரயன் ஆகியோரையும் அவரே வெளியேற்றினார். இறுதியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவின் அந்த இரண்டு விக்கெட்டுகள் தான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றால் அது மிகையல்ல.