கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இழந்து இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி தற்போது தென்னாபிரிக்காவுக்கு எதிராக தொடரை முழுமையாக தோற்று இருக்கிறது.
இந்த நிலையில் கம்பீர் இந்த தொடரில் என்னென்ன தவறு செய்தார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த தொடரில் இந்தியா தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம். கேப்டன் சுப்மன் கில் இல்லாததுதான். ஆனால் கில் ஏன் இல்லை என்ற கேள்விக்கு சின்ன குழந்தை கூட அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வே இல்லாமல் விளையாடியது தான் என்று காரணம் சொல்லும்.

ஆசியக் கோப்பை தொடர், வெஸ்ட் இண்டிஸ் தொடர், ஆஸ்திரேலியா தொடர் என தொடர்ந்து ஓய்வே இன்றி விளையாடிய கில் மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிக்கு கொல்கத்தாவில் தயாரானார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. கில் வெறும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு மட்டும் விளையாட வைத்திருந்தால், இந்தப் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.
இதன் மூலம் நல்ல ஓய்வை எடுத்து உடல் தகுதியையும் காத்துக் கொண்டிருப்பார். தேவையில்லாமல் கில்லை போட்டு விளையாட வைத்து முக்கியமான தொடரில் அவர் காயமடைந்துவிட்டார். இதேபோன்று தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, முகமது சமி, சர்பராஸ் கான், கருண் நாயர், ரஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.
இதில் சமி மற்றும் கருண் நாயரையாவது அணியில் சேர்த்து இருக்கலாம். சமி ரஞ்சி கோப்பையில் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதே கொல்கத்தா மைதானத்தில் தான் அவர் ரஞ்சியில் விளையாடினார். இதனால் அவரை முதல் டெஸ்ட் போட்டியில் தேர்வு குழுவினர் சேர்த்திருக்கலாம்.
ஆனால் அங்கும் தவறு செய்துவிட்டது. அதேபோன்று கருண் நாயர் கிட்டத்தட்ட ரஞ்சி போட்டியில் ஆறு ஆட்டங்களில் விளையாடி 602 ரன்கள் அடித்திருக்கிறார். அவருடைய பார்மை பார்த்தாவது அவருக்கும் நடுவரிசையில் வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். சரி இதையெல்லாம் போட்டி தொடங்குவதற்கு முன்பு செய்யப்பட்ட தவறு. ஆனால் தொடர் நடந்து கொண்டிருந்தபோதே பல்வேறு தவறுகளை கம்பீர் செய்தார்.
அது என்னவென்று தற்போது பார்க்கலாம். முதலில் கொல்கத்தா ஆடுகளத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டாம். எங்களுக்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக வேண்டும் என்று கேட்டு வாங்கினார். கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் தேவையே இல்லாமல் சாய் சுதர்சனை நீக்கி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை கம்பீர் சேர்த்தார். இதன் மூலம் இந்தியாவின் பேட்டிங் பலம் குறைந்தது.
மேலும் வாஷிங்டன் சுந்தரை மூன்றாவது வீரராக களம் இறக்கினார். இந்த போட்டியில் போது தான் கில் காயம் அடைந்ததால் இந்தியாவின் பேட்டிங் மேலும் பாதிக்கப்பட்டது. இதேபோன்று நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியதால் முக்கியமான பவுலர்கள்.அதிக ஓவர்கள் வீச முடியாத நிலை ஏற்பட்டது.
இதேபோன்று பேட்டிங் வரிசையை கம்பீர் அடிக்கடி மாற்றி வந்தார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் இடம்பெறாததால் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டார். மேலும் அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டார். அது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமாருக்கு பதில் ஒரு பிரத்தேக வேகப்பந்துவீச்சாளரையோ இல்லை ஒரு நல்ல பேட்ஸ்மேனையோ அணியில் சேர்த்து இருக்கலாம். நிதிஷ் குமார் பேட்டிங்கும் செய்யாமல் பந்துவீச்சு செய்யாமல் ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜாகவே அணியில் இருந்தார். இதற்கு காரணம் கம்பீர் செய்த முட்டாள்தனம் தான். இதேபோன்று சாய் சுதர்சனை முதல் டெஸ்ட்டில் நீக்கிவிட்டு இரண்டாவது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.
இப்படி அணியை விட்டு நீக்கியது, அவருடைய நம்பிக்கையை பாதிக்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் மூன்றாவது வீரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது டெஸ்டில் எட்டாவது வீரராக பேட்டிங் வரிசையில் விளையாடினார். இதுவும் அணியில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்திவிட்டது. இப்படி பல தவறுகளை கம்பீர் செய்ததால் தான் இந்தியா தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது. இனி இந்தியா அடுத்த ஆகஸ்ட் மாதம் தான் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கையில் சென்று விளையாடுகிறது.