மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஏன் முகமது சமி சேர்க்கப்படவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார். இளம் வீரர்கள் அடங்கிய அணியில் ஒரு அனுபவ வீரர் இருந்திருந்தால் அது நல்ல பாடமாக இளைஞர்களுக்கு இருந்திருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 350 ரன்கள் என்று இலக்கை நிர்ணயித்தது. இதனை துரத்திய தென்னாப்பிரிக்க அணி 11 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், 332 ரன்கள் வரை குவித்து இந்தியாவுக்கு பயம் காட்டியது.

இந்திய அணியின் பவுலிங் அனுபவம் இல்லாததுதான் காரணம் என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், இந்த கேள்வி நியாயமானது. எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி, ஷமி போன்ற ஒரு வீரர் கண்டிப்பாக அணிக்கு தேவை. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் கூட அவர் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறன் உடையவர்.
உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரருக்கு ஏன் அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் ஏன் இன்னும் விளையாட வைக்கப்படவில்லை. அதுவும் சிராஜ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சமி அணியில் இருந்திருந்தால் அவர் நிச்சயம் இளம் வீரர்களான பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா மற்றும் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு தனது அனுபவத்தை சொல்லிக் கொடுத்திருப்பார்.
நெருக்கடியான கட்டத்தில் எப்படி பந்து வீசவேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பார். இதை தான் இந்தியா தற்போது மிஸ் செய்கிறது. ஹர்ஷித் ராணா நல்ல லென்த்தில் பந்து வீசினார். புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களத்தில் நின்று எப்படி பந்து வீச வேண்டும் என்று அவருக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இதனால் தான் நான் சொல்கின்றேன். சீனியர்கள் அணியில் இருந்தால் அவர்கள் இளம் வீரர்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டியாக இருப்பார்கள். இதுதான் இந்திய கிரிக்கெட்டில் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்ட வரும் பழக்கம் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி எத்தனை முறை ஆர்ஸ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணாவிடம் பேசினார்கள் என்பதை நாம் பார்த்தோம்.
ரோகித் சர்மாவும் தனது அறிவுரைகளை கூறினார். அணியின் கேப்டனாக இல்லை என்றாலும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற வெறி அவர்களிடம் இருக்கின்றது. இதற்கான பாராட்டுகளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதை நாம் போட்டியின் முடிவிலே பார்த்திருக்கலாம். ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.
அவருடைய பேட்டிங் டெக்னிக்கில் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. அதே பந்துகளை கோலி எதிர்கொண்டு இருந்தால் சிக்ஸரை அடித்து இருப்பார். ஜெய்ஸ்வால் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கைப் கூறியுள்ளார்.