மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி மீண்டும் சேர்க்கப்படாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.
இதில் முகமது சமி சேர்க்கப்படவில்லை. இது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. முகமது சமிக்கு உடல் காயம் சரியாகவில்லை என முதலில் நினைக்கப்பட்டது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த சமி, தாம் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் கூறினார்.

அகர்கருக்கு தனது உடல் தகுதி குறித்து அப்டேட் தருவது எனது வேலை இல்லை என்றும் காட்டமாக அவர் பதில் அளித்தார். இது அகர்கரின் ஈகோவை கிளப்பிவிட்டது. இதன் காரணமாக தற்போது முகமது சமிக்கு தென்னாப்பிரிக்க தொடரிலும் அவர் வாய்ப்பு வழங்கவில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் சமி தனது உடல் தகுதியை நிரூபித்த்து மட்டுமல்லாமல் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மூன்று ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட் கைப்பற்றி அசத்திருக்கிறார்.இதில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும். இப்படி சமி 35 வயதிலும் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில் அவரை அணியில் சேர்க்காமல் அகர்கர் மீண்டும் நிராகரித்திருக்கிறார்.
அவருக்கு பதில் ஆகாஷ் தீப் என்ற வீரர் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே சர்பராஸ் கான் விஷயத்தில் அகர்கரும் கம்பீரும் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார் எழுந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் முகமது ஷமியும் இடம் பிடித்துள்ளார்.
35 வயதான ஷமி, இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 108 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 206 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் சமி வாய்ப்பு கிடைக்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்படுகிறது.