திருவனந்தபுரம்: இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் எனது மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள் என்று சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 2 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து சதம் விளாசியதன் மூலமாக இந்த சாதனையை படைத்திருக்கிறார். கடந்த போட்டியில் டக் அவுட்டானாலும் சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஃபார்ம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

நீண்ட நாட்களாக சொல்லி வந்த கன்சிஸ்டன்சி விமர்சனத்தை பேட்டிங் மூலம் சஞ்சு சாம்சன் தவிடுபொடியாக்கியுள்ளார். இதனால் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் இடத்தில் சஞ்சு சாம்சனை தொடர்ச்சியாக களமிறக்க வேண்டும் என்ற பேச்சுகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அதற்கேற்றபடியான ஆட்டத்தை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தி வருவதால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இணைந்து எனது மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள்.
ஆனால் அவர்கள் எவ்வளவு காயப்படுத்தினாலும், எனது மகன் சிக்கலை எதிர்கொண்டு சாதித்திருக்கிறார். அதேபோல் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்தின் வார்த்தைகள் எங்களை காயப்படுத்தியுள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி சதம் விளாசிய பின், ஸ்ரீகாந்த் கொஞ்சம் கூட பாராட்டவில்லை. சாதாரண அணியான வங்கதேசத்துடன் தான் சஞ்சு சாம்சன் சதம் அடித்துள்ளார் என்று கிண்டல் செய்கிறார்.
யாருடன் சதம் அடித்தாலும், அது சதம் தான். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரை போல் சஞ்சு சாம்சன் தனது ஸ்டைலில் ஒரு கிளாசிக் சதத்தை அடித்ததாக நினைக்கிறேன். அதனால் சஞ்சு சாம்சனுக்கான மரியாதையை சீனியர்கள் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார்.
அதன்பின் இந்திய அணிக்காக சில போட்டிகளில் களமிறங்கினாலும், தொடர்ச்சியாக எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்த பின் தான், சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.