ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்திருந்தாலும், தங்கள் அணியின் போராட்டம் மிகுந்த பெருமை அளிப்பதாகத் தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 11 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்து, இந்திய அணியை கடைசி வரை பயமுறுத்திய தனது வீரர்களை அவர் பாராட்டி பேசியுள்ளார்.
ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 350 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசை வீரர்கள் அபாரமாக ரன் குவித்தனர். குறிப்பாக ப்ரீட்ஸ்கே 72 ரன்கள், மார்கோ ஜான்சன் 39 பந்துகளில் 70 ரன்கள், கார்பின் போஷ் 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தது பற்றி போட்டிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் மார்க்ரம், தோல்விக்கான காரணத்தையும், அணியின் போராட்ட குணத்தையும் விவரித்தார்.

மார்க்ரம் பேசுகையில், "உண்மையிலேயே மிகவும் பெருமையாக இருக்கிறது. டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து எங்கள் வீரர்கள் விளையாடுவதைப் பார்ப்பதே ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. ஒரு மந்திரவாதி தொப்பியிலிருந்து முயலை வரவழைப்பது போல, நாங்களும் ஏதாவது ஒரு மேஜிக் செய்து இந்த போட்டியை வெல்வோம் என்ற நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை" என்றார்.
தோல்வி குறித்துப் பேசிய அவர், "எல்லாவற்றையும் விட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டை இழந்ததே முக்கிய காரணம். புதிய பந்தில் ஆரம்பத்தில் வேகம் மற்றும் ஸ்விங் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனாலும் சேஸிங் செய்வதுதான் சரியான வழி என்று நினைத்தோம். அந்த ஆரம்பக்கட்ட சிக்கலை நாங்கள் சமாளித்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
ஜான்சன் மற்றும் கார்பின் போஷ் ஆகியோரின் போராட்டத்தைப் பாராட்டிய அவர், "மிடில் ஆர்டர் வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதை இன்று பார்த்தோம். ஆட்டத்தில் அங்கங்கே சில தருணங்களை நாங்கள் தவறவிட்டோம். ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த முயற்சி பெருமைக்குரியது. வெற்றியை மிக நெருக்கமாக வந்தோம். எந்த அணியும் கடைசி வரை பேட்டிங் செய்ய விரும்புவார்கள். அதைத்தான் ஜான்சன் மற்றும் போஷ் இன்று எங்களுக்காகச் செய்தார்கள்" என்று மார்க்ரம் தனது வீரர்களை பாராட்டினார்.
வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், தென்னாப்பிரிக்க அணியின் இந்த கடைசி வரை போராடும் மனப்பான்மை அடுத்த போட்டிகளில் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பதை மார்க்ரம் தனது பேச்சின் மூலம் உணர்த்தியுள்ளார்.