விசாகப்பட்டினம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த டிக்கெட் விற்பனை, விராட் கோலியின் இரண்டு சதங்களுக்குப் பிறகு மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
அது மட்டுமின்றி, விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள், விமானம் தாமதமான கோபத்தை மறந்து, விராட் கோலியைப் பார்த்ததும் உற்சாகமடைந்த சம்பவம் அவரது ரசிகர் பலத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் விராட் கோலி வரவு மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசாகப்பட்டினத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) தென்னாப்பிரிக்கா உடனான 3-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கியது. ஆனால், அப்போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆன்லைன் விற்பனை மந்தமாக இருந்ததால், கவுண்டர் விற்பனையைத் தொடங்கலாமா என்று ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ACA) யோசித்தது.
ஆனால், ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் போட்டிகளில் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசியதும் நிலைமை தலைகீழாக மாறியது.
இதுகுறித்து ஆந்திர கிரிக்கெட் சங்க அதிகாரி ஒய். வெங்கடேஷ் கூறுகையில், "ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் கோலி சதம் அடித்த பிறகு, 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரூ.1,200 முதல் ரூ.18,000 வரையிலான டிக்கெட்டுகள் என எதுவும் மிச்சமில்லை" என்று வியப்புடன் தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானங்களில் ஒன்று. இங்கு இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 97.83 என்ற சராசரியுடன் ரன் குவித்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும். விராட் கோலி பழைய ஃபார்முக்கு வந்திருப்பதாலும், அவருக்குப் பிடித்த மைதானம் என்பதாலும் ரசிகர்கள் படையெடுத்துள்ளனர்.
ராய்ப்பூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல இந்திய அணி விமான நிலையம் வந்தது. அங்கு விமானம் தாமதமானதால் பொதுப்பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கடும் கோபத்தில் பயணிகள் இருந்த நேரம் அது.
அப்போது திடீரென விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்த அடுத்த நொடியே, பயணிகள் தங்கள் கோபத்தை மறந்துவிட்டனர். விமானம் தாமதமானதைப் பற்றிக் கவலைப்படாமல், அனைவரும் தங்கள் செல்போன்களை எடுத்துக்கொண்டு கோலியை வீடியோ எடுக்கவும், கையசைக்கவும் தொடங்கினர்.
ஒரு சில நிமிடங்களில் அந்த இடத்தின் சூழலையே கோலியின் வருகை மாற்றிவிட்டது. விசாகப்பட்டினம் விமான நிலையத்திலும் ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் 1-1 என சமனில் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-