சென்சுரியன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் சென்சுரியன் ஆடுகளத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோர் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு 2 முறை வாய்ப்புகள் கிடைத்தது. 2018ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் விராட் கோலி அணித் தேர்வில் செய்த தவறால் இந்திய அணி டெஸ்ட் தொடரை பறி கொடுத்தது. 2022ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி கேப்டன்சி சர்ச்சையால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் முதல்முறையாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி சிறப்புமிக்க கேப்டவுன் மைதானத்திலும் நடக்கவுள்ளது. தற்போது சென்சுரியன் மைதானத்தின் ஆடுகளத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த ஆடுகளத்தில் அனைத்து பகுதிகளிலும் முழுக்க முழுக்க புற்கள் வளர்ந்திருக்கிறது. வழக்கமாக கடைசி நாளில் புற்கள் வெட்டப்படும் என்றாலும், முழுமையாக புற்களை அகற்ற வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஆடுகளத்தை பார்த்த இந்திய அணி ரசிகர்கள் பலரும், ஆடுகளத்தில் விவசாயம் செய்யலாம் போல் என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த ஆடுகளத்தின் பராமரிப்பாளர் பேசுகையில், இந்த பிட்சில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பவுன்ஸ் கிடைக்கும். அதன்பின் 3ஆம் நாளுக்கு பின் ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்திய அணி தரப்பில் ஒரேயொரு ஸ்பின்னருடன் களமிறங்கவே வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஜடேஜாவின் பேட்டிங்கை கணக்கில் கொண்டு, அஸ்வின் பென்ச் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.