சென்சுரியன்: கிரிக்கெட்டின் வரலாறு, கலாச்சாரம், பெருமை என்று அத்தனை விஷயங்களும் அடங்கியதே டெஸ்ட் கிரிக்கெட் என்றும், அதனை விளையாடுவதே எனது முதன்மையான நோக்கம் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி முதல் கேப் டவுன் மைதானத்திலும் நடக்கவுள்ளது. தென்னாப்பிரிக்கா மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட அனைவரும் களமிறங்கவுள்ளனர். இதன் மூலம் சீனியர் வீரர்களின் கவனம் முழுக்க டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவில் உள்ள டக்ஸ் ஓவல் மைதானத்தில் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர்.
இந்தியா ஏ அணியுடனான பயிற்சி போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாடினர். அதேபோல் பயிற்சியாளர்கள் குழுவும் தென்னாப்பிரிக்கா அணியின் திட்டங்களுக்கு ஏற்ப பயிற்சி அளித்து வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது குறித்து கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே ஸ்பெஷல். டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் நமக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும்.
அதனால் அனைத்து நாட்களிலும் நாம் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும். ஒரு மனிதராகவும், கிரிக்கெட்டராகவும் டெஸ்ட் கிரிக்கெட் மிகப்பெரிய சவாலை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து விராட் கோலி பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட் தான் கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளம். வரலாறு, கலாச்சாரம், பெருமை என்றும் சொல்வேன். இந்திய அணிக்காக நீண்ட இன்னிங்ஸை விளையாடி வெற்றிபெறுவது மிகச்சிறந்த உணர்வை அளிக்கும். டெஸ்ட் கிரிக்கெட் தான் எனக்கு எல்லாம். இந்தியாவுக்காக 100 போட்டிகளுக்கும் மேல் விளையாடுவதை மிகப்பெரிய பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.