தர்மசாலா: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று தர்மசாலாவில் நடைபெறவுள்ள 3-வது டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் ஒரு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. தொடர்ந்து சொதப்பி வரும் துணை கேப்டன் சுப்மன் கில்லை நீக்கிவிட்டு, அதிரடி மன்னன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க இதுவே சரியான தருணம்.
துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக சுப்மன் கில்லுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், டி20 கிரிக்கெட்டில் அவரது அணுகுமுறை அணிக்குப் பின்னடைவாகவே உள்ளது. முதல் போட்டியில் 2 பந்துகளில் 4 ரன்கள், இரண்டாவது போட்டியில் முதல் பந்திலேயே 'கோல்டன் டக்' என சொதப்பினார் சுப்மன் கில்.

பவர்-பிளேயில் அதிரடி காட்ட வேண்டிய நேரத்தில், விக்கெட்டை பறிகொடுக்கும் கில்லைத் தொடர்ந்து ஆதரிப்பது 2026 டி20 உலகக்கோப்பை கனவைச் சிதைத்துவிடும் என்ற பார்வை உள்ளது.
மறுபுறம், 2024-ம் ஆண்டில் மட்டும் டி20 போட்டிகளில் 3 சதங்களை விளாசிய சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார். ஓப்பனராகக் களமிறங்கிய 17 போட்டிகளில் 522 ரன்களைக் குவித்துள்ள அவருக்கு, இந்தத் தொடரில் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதியாகும். அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் இணைந்தால், இந்திய அணியின் தொடக்கம் அனல் பறக்கும்.
இரண்டாவது போட்டியில் 54 ரன்களை வாரி வழங்கி, ஒரே ஓவரில் 7 வைடுகளை வீசிப் பயிற்சியாளர் கம்பீரை கடுப்பேற்றிய அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்படலாம்.
சஞ்சு சாம்சன் அணியில் வந்தால், அவர் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனித்துக்கொள்வார். இதனால் பேட்டிங்கில் சோபிக்காத ஜித்தேஷ் சர்மாவை நீக்கிவிட்டு, ஒரு ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவை அணியில் சேர்க்க முடியும். இது பந்துவீச்சுப் படையை இன்னும் பலமாக்கும்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா 3-வது டி20 போட்டிக்கான இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன்:
அபிஷேக் சர்மா
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்) / சுப்மன் கில்
திலக் வர்மா
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
சிவம் துபே
ஹர்திக் பாண்டியா
அக்சர் படேல்
குல்தீப் யாதவ் / ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்)
வருண் சக்கரவர்த்தி
ஹர்ஷித் ராணா / அர்ஷ்தீப் சிங்
ஜஸ்பிரித் பும்ரா