டெல்லி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் சிவம் துபே தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பை மீது கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் வாய்ப்பை பெற்றனர். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதால், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இந்த தொடரிலும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணியில் இளம் வீரர்கள் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக வாய்ப்பே வழங்கப்படாமல் சிவம் துபே இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஃபினிஷிங்கில் சிறப்பாக செயல்படும் அவர், வெளியேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் மோசமாக செயல்பட்டு வரும் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆவேஷ் கானும் நீக்கப்பட்டுள்ளார். ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆவேஷ் கான் விளையாடியுள்ள நிலையில், உடனடியாக நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான எந்த திட்டமிடலும் இல்லாமல் பிசிசிஐ செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.