விசாகப்பட்டினம்: இந்தியாவிற்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் 80 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என சமநிலையில் இருந்ததால், இப்போட்டி வெற்றியாளரை தீர்மானித்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இந்திய பந்துவீச்சை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பம் சோகமானது. ஐந்தாவது பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் டக் அவுட்டானார். பின்னர், குயிண்டன் டி காக்குடன் இணைந்த கேப்டன் பவுமா நிதானமாக விளையாட, மறுமுனையில் டி காக் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டி காக் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என விளாச, தென்னாப்பிரிக்காவின் ரன் வேகம் உயர்ந்தது. மறுமுனையில் பவுமா 48 ரன்களிலும், மேத்யூ பிரிட்ஸ்கே 24 ரன்களிலும், எய்டன் மார்க்கரம் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா தடுமாறியபோதும், தனியாளாக நின்று விளையாடிய டி காக், 80 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார்.
இந்தச் சதம், குயிண்டன் டி காக் மூன்று முக்கிய சாதனைகளைப் படைக்க உதவியது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், சங்கக்காராவின் சாதனையை அவர் சமன் செய்தார். இருவரும் தலா 23 சதங்களுடன் முதல் இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.
இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலிலும் குயிண்டன் டி காக் இணைந்தார். ஜெயசூர்யா 85 இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் அடித்த நிலையில், டி காக் வெறும் 23 இன்னிங்ஸ்களிலேயே அதே 7 சதங்களை எட்டி, அசாத்திய சாதனை படைத்தார்.
அதுமட்டுமல்லாமல், ஆசிய மண்ணில் வெளிநாட்டு வீரர் ஒருவர் அடித்த அதிக சதங்கள் என்ற ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை குயிண்டன் டி காக் சமன் செய்தார். இருவரும் தலா 10 சதங்களுடன் இந்தச் சிறப்பைப் பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து அதிரடி காட்டிய குயின்டன் டி காக் 89 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார். குயின்டன் டி காக் ஓய்வு பெற்றுவிட்டு, பின்னர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்து தனது 2வது இன்னிங்ஸ் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.