அகமதாபாத்: 2024 T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து தங்கள் அணி ஒருபோதும் பேசியதில்லை என தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் குவின்டன் டி காக், தெரிவித்தார். உலகக் கோப்பைப் போட்டிகளின் கணிக்க முடியாத தன்மை இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
பார்படாஸில் இதயத்தை நொறுக்கும் தோல்விக்குப் பிறகு, வீரர்கள் அவரவர் வழி சென்றதாகவும், ஆட்டம் குறித்து எவ்வித விவாதமும் நடைபெறவில்லை என்றும் டி காக் குறிப்பிட்டார். அந்தத் தோல்வியை கடந்துவிட்டதாக அவர் விளக்கினார்.

இந்தியா அந்த இறுதியாட்டத்தில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தென் ஆப்பிரிக்க அணி 75% ஆட்ட முன்னிலை பெற்று, கடைசி ஐந்து ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் கையில் இருக்க, வெற்றிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையை எட்டியது. ஆனால், ஜஸ்பிரித் பும்ராவின் அற்புதமான பந்துவீச்சு, ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவை இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றன.
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி காக், "உண்மையைச் சொல்லப்போனால், அந்த ஆட்டத்திற்குப் பிறகு நாங்கள் அதை மறந்துவிட்டோம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றி பேச யாரும் விரும்பவில்லை. நாங்கள் வீட்டிற்குச் சென்று அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தினோம். அதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் பேசியதில்லை," என்றார். அந்த இறுதிப் போட்டியில் அவர் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார்.
"உலகக் கோப்பையின் இயல்பே யாருக்கும் சாதகத்தன்மை கிடையாது. எந்த நேரத்திலும், யாரும் ஒரு ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக வெல்லலாம். குறிப்பாக T20 உலகக் கோப்பைகள் மிகவும் நிலையற்ற விளையாட்டு. இரண்டிலிருந்து மூன்று ஓவர்களில் ஒரு தனிநபரின் ஆட்டத்தால் போட்டி திசைமாறலாம். கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் ஒருவரையொருவர் பலமுறை எதிர்கொண்டுள்ளோம். அணிகள் பெரிய அளவில் மாறவில்லை. களத்தில் அழுத்தம் நிலவும் தருணங்களை யார் சிறப்பாகக் கையாண்டு, தங்கள் வசம் ஆக்குகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்," என்று டி காக் கூறினார்.