சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 90 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்ற குயின்டன் டி காக், இந்திய அணிக்கு பிட்ச் செய்த பாதகத்தையும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சமாளித்தது எப்படி என்பது குறித்தும் பேசினார்.
சண்டிகரில் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தொடரை 1-1 என சமன் செய்தது. 46 பந்துகளில் 90 ரன்கள் குவித்த டி காக் வெற்றிக்கு வித்திட்டார். தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் விருது பெற்ற போது, தனது அதிரடி ஃபார்ம் குறித்துப் பேசிய டி காக், "உண்மையைச் சொல்லப்போனால் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை. அது தானாக நடக்கிறது. நான் செட் ஆகிவிட்டால், அதை பெரிய ஸ்கோராக மாற்ற முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்.
நாங்கள் இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி விளையாடுகிறோம். அதுவும் குறிப்பாக இந்தியாவில் நல்ல பேட்டிங் பிட்ச்களில் ஆடுகிறோம். அதுதான் இந்த ரன் குவிப்புக்குக் காரணம் என்று நினைக்கிறேன்," என்றார்.
முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் டக்-அவுட் ஆன டி காக், இந்த முறை அவரை வெளுத்து வாங்கினார். இது குறித்து அவர் பேசுகையில், "அர்ஷ்தீப் சிங் என்னை நிறைய முறை அவுட் செய்திருக்கிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாகத்தான் அவுட் ஆகிறேன்.
எனவே, இந்த முறை பேட்டிங்கில் ஒரு சிறிய தொழில்நுட்ப மாற்றத்தை செய்தேன். அது குறித்து விழிப்புடன் இருந்தேன். அது இயல்பாகவே கைகொடுத்தது" என்று அர்ஷ்தீப்பை சமாளித்த ரகசியத்தைக் கூறினார்.
இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்யும்போது பிட்ச் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு. இதுபற்றி டி காக் கூறுகையில், "நாங்கள் பேட்டிங் செய்தபோது பிட்ச் ஆரம்பத்தில் மெதுவாக இருந்தது. புதிய பேட்ஸ்மேன்கள் உள்ளே வந்து ரன் அடிப்பது கடினமாக இருந்தது. அதனால் தான் நானும் மார்க்ரமும் பார்ட்னர்ஷிப் அமைத்தோம்."
"முக்கியமான விஷயம் என்னவென்றால், பந்து ஈரமாக இல்லை. பந்து காய்ந்துதான் இருந்தது. ஆனால் இந்தியா பேட்டிங் செய்தபோது பிட்ச் வேகம் எடுத்தது. பந்து வேகமாக சென்றது. இதுதான் இரண்டு இன்னிங்ஸுக்கும் உள்ள வித்தியாசம்" என்று விளக்கினார்.
அதாவது, பனிப்பொழிவு இருக்கும், பந்து வழுக்கும் என்று இந்தியா நினைத்தது. ஆனால் பந்து ஈரமாகாததால், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் எளிதாக இந்தியாவைச் சுருட்டிவிட்டனர் என்பதை டி காக் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.