சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் ருத்ர தாண்டவம் ஆடினார். இந்திய பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 46 பந்துகளில் 90 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், அந்த முடிவை டி காக் தனது பேட்டிங் மூலம் கேள்விக்குறியாக்கினார்.

தொடக்க வீரராகக் களமிறங்கிய டி காக், முதல் ஓவரிலிருந்தே அதிரடியைக் கையில் எடுத்தார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, பும்ரா என யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விரட்டிய அவர், 5 பவுண்டரிகள் மற்றும் 7 இமாலய சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். கேப்டன் எய்டன் மார்க்ரம் (29) உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
சதத்தை நோக்கி அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருந்த டி காக், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 16-வது ஓவரில் ரன் ஓட முயன்றபோது, விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். 46 பந்துகளில் 90 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 195.65) எடுத்திருந்த அவர், வெறும் 10 ரன்களில் சதத்தைத் தவறவிட்டு ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இந்த இன்னிங்ஸ் மூலம், இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் அதிக ரன் குவித்த தென்னாப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் டி காக் 3-வது இடத்தைப் பிடித்தார்.
டேவிட் மில்லர் - 106* (கவுகாத்தி, 2022)
ரிலீ ரோசோவ் - 100* (இந்தூர், 2022)
குயின்டன் டி காக் - 90 (முல்லன்பூர், 2025)
ஹென்ரிச் கிளாசன் - 81 (கட்டக், 2022)
இந்தியத் தரப்பில் வருண் சக்கரவர்த்தி மட்டுமே ஆறுதல் அளித்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை (ஹென்ரிக்ஸ், மார்க்ரம்) வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 3 ஓவரில் 38 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 3 ஓவரில் 34 ரன்களையும் வாரி வழங்கினர்.