ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில் பலரும் பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அஸ்வின் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் திடீரென்று கம்பீருக்கு சாதகமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை பயிற்சியாளராக கம்பீர் ஏற்படுத்தி விட்டார் என்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,தற்போது இருக்கும் கிரிக்கெட் சூழலில் கம்பீர் ஒரு சிறந்த பயிற்சியாளராக வெள்ளை நிற பந்தில் விளங்குகிறார். இதற்கு ஐபிஎல் தொடருக்கு தான் நாம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். ஐபிஎல் தொடர் மூலம் பல திறமை வாய்ந்த வெள்ளை நிற கிரிக்கெட் வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
அதிலும் அபிஷேக் ஷர்மா டி20 கிரிக்கெட்டில் கவனிக்கத்தக்க வீரராக மாறி இருக்கின்றார். டி20 போட்டியை எப்படி விளையாட வேண்டும். வரும் டி20 உலக கோப்பையில் எப்படி இந்தியா செயல்பட வேண்டும் என்பதை அவர் தனது பேட்டிங் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கின்றார். கம்பீர் வந்த பிறகு தற்போது பயமின்றி விளையாடக்கூடிய அணுகுமுறையை இந்திய வீரர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
நான் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடும் போது இதே போல் ஒரு மனநிலையை பேட்ஸ்மேன்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் விளையாடும் போது கடைசி வரை அப்படி நடக்கவில்லை. ஆனால் தற்போது நான் ஓய்வு பெற்ற பிறகு இந்த பயமின்றி விளையாடும் முறையை இந்தி வீரர்கள் கடைபிடித்து விளையாடுகிறார்கள்.
ஒரு வழியாக இந்திய கிரிக்கெட் இப்படி மாறியதற்கு நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். இப்படிப்பட்ட கிரிக்கெட் தான் நாம் விளையாட வேண்டும். அதுவும் சூரியகுமார் கேப்டனாக உள்ள நிலையில் இந்திய t20 அணி பயமின்றி செயல்படுகிறது. இப்படி விளையாடும் போது சில குறைகள் ஏற்படும் தான். ஆனால் பும்ராவின் பந்துவீச்சை வைத்து அவர்கள் குறையை சரி செய்து விடுகிறார்கள் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார்.