மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு சரி இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணியில் நேற்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்டார்.
அதேபோன்று ஹர்ஷித் ராணா, பேட்டிங் வரிசையில் எட்டாவது இடம் கிடைத்தது. இதுபோன்று ஜடேஜா அணியில் இருந்ததால் பேட்டிங் வரிசை பலமாக காணப்பட்டது. இந்த தருணத்தில் ஆல்ரவுண்டரான நிதிஷ்குமார் ரெட்டியை ஏன் சேர்க்கவில்லை என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஹர்திக் பாண்டியா இல்லாத அணியில் நிதிஷ் குமார் ரெட்டியை ஏன் சேர்க்கவில்லை என்று எனக்கு சந்தேகம் இருக்கின்றது. இந்த அணியில் நிதிஷ் குமார் இல்லை என்றால் அணியை தேர்வு செய்யும் விஷயத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.
ஏன் அவரை தேர்வு செய்யவில்லை. ஹர்திக் செய்யும் அதே விஷயத்தை நிதிஷ்குமார் ரெட்டியாலும் செய்ய முடியும். அவருக்கு தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கினால்தான் அவரால் தன்னுடைய திறமையை நிரூபிக்கவும் முடியும், வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
இந்த அணியில் நிதிஷ்குமார் இல்லை என்றால் நாம் இது போன்ற தொடருக்கு எந்த மாதிரி அணியை தேர்வு செய்கிறோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும். ருதுராஜ் தற்போது ஒரே போட்டியில் தான் இந்த தொடரில் விளையாடுகிறார். அதற்குள் அவரை நீக்கிவிட்டு திலக் வர்மாவை சேர்க்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் அறிவு சார்ந்த விஷயமாக எனக்கு தெரியவில்லை.
ருதுராஜ்க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள். அதன் பிறகு உங்களுடைய சரியான காம்பினேஷன் என்ன என்பதில் முடிவு செய்யுங்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் வரும் புதன்கிழமை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது.