மும்பை: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிந்துவிட்டது. இந்த தொடரில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2வது போட்டியில் மட்டும் தோல்வியை தழுவியது. இந்த தொடரில் கில், ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், இந்திய ஒருநாள் அணியில் ஏற்பட்டுள்ள போட்டி குறித்து பேசினார். அதில்,நல்ல வேலை நான் தேர்வு குழு உறுப்பினராக இல்லை என்று நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனென்றால் தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய ஐந்து பேட்டர்களில் இரண்டு பேட்ஸ்மேன்களை நீக்க வேண்டிய சூழல் வரும்.

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கண்டிப்பாக இடம்பெறுவார்கள். கில் தான் உங்கள் அணியின் கேப்டன். எனவே இந்த மூன்று வீரர்களும் தானாகவே தேர்வாகி விடுவார்கள். கூடுதலாக ஒரு தொடக்க வீரர் தேவைப்படுவார். அது ருதுராஜ் அல்லது ஜெயஸ்வாலாக கூட இருக்கலாம்.
இந்த தருணத்தில் ஸ்ரேயாஸ் அணிக்கு திரும்புவார். இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டி என்று இருக்கிறது. ஐபிஎல் நடந்து முடிந்த பிறகு இன்னும் பல விஷயங்கள் மாறும் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது உண்மையிலே சிரிப்பை வர வைக்கிறது.
இருவருக்கும் இன்னும் நிரூபிக்க வேறு என்னதான் இருக்கின்றது. அவர்கள் தங்களுடைய மெசேஜை தெளிவாக சொல்லி விட்டார்கள். இவ்வளவு பெரிய நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். இதனால் தங்களுடைய திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு கிடையாது.
அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் செய்து முடித்து விட்டார்கள். விராட் கோலியும், ரோகித் சர்மாவும், இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார்கள். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றால் எப்பேர்ப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு தேவை என்பதை காட்டி விட்டார்கள். தற்போது ஒரு நாள் அணியில் ஜெய்ஸ்வால் மீது தான் அழுத்தம் இருக்கின்றது.
கில் அணிக்கு திரும்பி விடுவார். ருதுராஜ் ரன்களை குவித்து விட்டார். திலக் வர்மா வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு இடத்திற்கும் பல போட்டிகள் இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட வீரர்கள் அறிவார்கள். இதனால் நாம் அணியை விட்டு மிக விரைவில் வெளியேறி விடுவோம் என்று ஜெய்ஸ்வாலுக்கு நன்றாக தெரியும்.
எனவே கடைசி போட்டியில் அவர் அடித்த சதம் மிகவும் முக்கியமானது. தனது இயல்பான ஆட்டத்தை கைவிட்டு தமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆட்டத்தை முதலில் விளையாடிவிட்டு பின்னர் தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை காட்டினார். களத்தில் எப்போதுமே அதிக நேரத்தை செலவிட வேண்டும்.தமக்கு கிடைத்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தினார் என்பதை பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
ருதுராஜ் இன்னிங்ஸில் ரோகித் சர்மா மிகவும் உதவினார் என்று அஸ்வின் கூறியுள்ளார். இதனிடையே, ஐந்து t20 போட்டிகள் கொண்ட தொடர் நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் சூரியகுமார் யாதவ் தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.