என்னோட கவனம் அது தான்.. இந்திய அணியை தவிக்கவிட்ட ராகுல் டிராவிட்.. பயிற்சி கொடுக்க மாட்டாராம்!
ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிவடைந்தது. இதன்பின் நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.

இதனிடையே ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்காவில் இறங்கியுள்ள நிலையில், ராகுல் டிராவிட் அவர்களுடன் இணையவுள்ளார். இதனால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு என்சிஏவில் பணியில் உள்ள சிதன்ஷு கோடக் பயிற்சி கொடுக்கவுள்ளார்.
அவருக்கு உறுதுணையாக அஜய் ரத்ரா ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், ரஜீப் தத்தா பவுலிங் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளார். முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கினாலும், அடுத்த 2 போட்டிகள் டிச.19 மற்றும் டிச.21 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதனால் டெஸ்ட் தொடருக்கான அணியுடன் இணைந்து பணியாற்ற ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழு முன்னதாக சென்சுரியனில் முகாமிட்டுள்ளது.
இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ராகுல் டிராவிட்டின் அடுத்த கவனம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருப்பதாக தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
இம்முறை அதற்காக இந்திய அணி தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் பயிற்சி போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல் முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் உடனடியாக டெஸ்ட் அணியினருடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, December 16, 2023, 18:57 [IST]
Other articles published on Dec 16, 2023


Click it and Unblock the Notifications