சென்சுரியன்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சந்தித்த முதல் பந்திலேயே இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங் சிக்ஸ் அடித்து அசத்தியுள்ளார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ரமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
2023 ஐபிஎல் தொடரின் போது மும்பை அணிக்காக களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ரமன்தீப் சிங். அந்த சீசனில் ஃபினிஷர் ரோலில் களமிறங்கிய ரமன்தீப் சிங் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 125 ரன்களை சேர்த்தார். இதனைத் தொடர்ந்து கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக களமிறங்கினார். பேட்டிங்கில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஃபீல்டிங்கில் இவரின் செயல்பாடுகள் வியக்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு ரமன்தீப் சிங்கிற்கு கிடைத்தது. இந்த தொடரில் 3 போட்டிகளில் களமிறங்கிய ரமன்தீப் சிங் 191.83 ஸ்ட்ரைக் ரேட்டில் 94 ரன்களை விளாசினார். பேட்டிங், ஃபீல்டிங் மட்டுமல்லாமல் மீடியம் ஃபாஸ்ட் பவுலராகவும் ரமன்தீப் சிங்கின் செயல்பாடுகள் ஈர்த்தது.
இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் ரமன்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். முதல் 2 போட்டிகளில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் 2வது போட்டியின் போது ரமன்தீப் மாற்று ஃபீல்டராக செயல்பட்ட விதம் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கே வியப்பை கொடுத்தது. இந்த நிலையில் 3வது டி20 போட்டியில் ரமன்தீப் சிங் இந்திய பிளேயிங் லெவனில் தேர்வானார்.
இதனைத் தொடர்ந்து நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அவருக்கு கேப் அணிவித்து வரவேற்றார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 190 எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. அப்போது அறிமுக வீரரான ரமன்தீப் சிங் களம் புகுந்தார். 18வது ஓவரின் கடைசி பந்தை சிமிலானே வீச, அது சர்வதேச கிரிக்கெட்டில் ரமன்தீப் சிங்கின் முதல் பந்தாக அமைந்தது. அந்த பந்தில் அதிரடியாக சிக்சர் விளாசி ஆச்சரியம் கொடுத்தார்.
அறிமுகப் போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே ரமன்தீப் சிங் சிக்சர் அடித்தது வர்ணனையாளர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய அவர், இந்தப் போட்டியில் 6 பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்களை விளாசினார். மேலும் முதல் பந்திலேயே சிக்சர் அடித்ததன் மூலமாக, இந்திய அணிக்காக அறிமுகமாகி முதல் பந்தில் சிக்சர் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.