அகமதாபாத்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதில் சஞ்சு சாம்சன் ஆடும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில், "இப்படிப்பட்ட பிளேயரை ஏன் வெளிய உட்கார வெச்சிருக்கீங்க? ஒவ்வொரு முறையும் யாராவது காயப்பட்டா தான் இவருக்கு வாய்ப்பு கொடுப்பீங்களா?" என்று நேரலையிலேயே இந்திய அணி நிர்வாகத்தை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பி பொங்கியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
அகமதாபாத்தில் நடக்கும் 5வது டி20 போட்டியில், சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த கேப்பில் கிடா வெட்டுவது போல, சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 37 ரன்கள் விளாசி தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்தார்.

சஞ்சு சாம்சனின் இந்த ஆட்டத்தை வர்ணனையாளர் அறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ரவி சாஸ்திரி, உணர்ச்சிவசப்பட்டு சில முக்கியமான கேள்விகளை முன்வைத்தார். "அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்கும்போது, 'இவர் ஏன் முதலில் இருந்தே அணியில் இல்லை?' என்ற கேள்வி தான் மனதில் வருகிறது. ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் மட்டும்தான் இவரை அணிக்குள் கொண்டு வருவீர்களா?.
மேல் வரிசையில் துவக்க வீரராக இறங்குவதற்கு இவர் தான் இயற்கையான தேர்வு. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் மூன்று சதங்களை அடித்துள்ளார். அதுவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து சதம் அடித்தவர். அவர் ஒரு வெடியைப் போல, மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். அப்படிப்பட்டவரை ஏன் பயன்படுத்த மறுக்கிறீர்கள்?" என்று சாஸ்திரி சரமாரியாக விளாசினார்.
சஞ்சு சாம்சன் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து சதம் அடித்து சாதனை படைத்தவர். மறுபுறம், சுப்மன் கில் டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்தத் தொடரில் கில் ஆடிய 3 போட்டிகளில் சேர்த்த ரன்களை விட, சஞ்சு சாம்சன் இன்று ஒரே போட்டியில் அதிக ரன்களை அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் அவரை விட அதிகம்.
ரவி சாஸ்திரியின் இந்த கருத்தும், சஞ்சுவின் ஆட்டமும் சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. "இனியும் கில்லை வைத்துக்கொண்டு சஞ்சுவை ஓரங்கட்ட முடியாது" என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. சாஸ்திரி கேட்டது போல, சஞ்சுவின் திறமைக்கு இனிமேலாவது நிரந்தர வாய்ப்பு கிடைக்குமா? அல்லது மீண்டும் கில் வந்ததும் சஞ்சு வெளியே போவாரா?