மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்க வீரர்களின் பவுலிங்கை தாக்குப் பிடிக்க முடியாமல் 201 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து 288 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி பாலோ ஆனை கொடுக்காமல் மீண்டும் பேட்டிங் செய்தது.

தற்போது மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி தென்னாபிரிக்க அணி 26 ரன்கள் எடுத்திருக்கிறது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 314 ரன்கள் கூடுதலாகும். கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் இந்த டெஸ்ட் போட்டியில் எட்டாவது இடத்தில் களமிறங்கி 48 ரன்களை சேர்த்து இருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கம்பீர் செய்வது கொஞ்சம் கூட அறிவுப்பூர்வமானதாக இல்லை. இதற்கு பின்னால் என்ன செயல் திட்டம் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இந்த தொடரிலே அவர்கள் எந்த மாதிரி வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் நான்கு ஸ்பின்னர்களை பயன்படுத்தினீர்கள்.
ஆனால் அதில் ஒரு ஸ்பின்னர் ஒரே ஒரு ஓவர் மட்டும்தான் வீசியிருந்தார். இதற்கு பதிலாக நீங்கள் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனை பயன்படுத்தி இருக்க வேண்டும். அங்கு வாஷிங்டன் சுந்தரை மூன்றாவது வீரராக களம் இறக்கினீர்கள். தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் வந்திருப்பதால் நீங்கள் வாஷிங்டன் சுந்தரை நான்காவது இடத்தில் வேண்டுமானாலும் களம் இறக்கி இருக்கலாம்.
ஆனால் நீங்கள் எட்டாவது இடத்தில் விளையாட வைத்திருக்கிறீர்கள். இவர் நம்பர் எட்டாவது இடத்தில் விளையாடும் வீரர் கிடையாது என்று ரவி சாஸ்திரி தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தோதா கணேஷ் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணி பேட்டிங்கை பார்க்கும்போது என் கண்களால் நம்ப முடியவில்லை. இந்திய அணியில் பெரும் குழப்பம் இருக்கிறது. வாஷிங்டன் சுந்தரை அடிக்கடி மாற்றுவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.