விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்தும் விதம் குறித்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
"அவருக்கு அணியில் என்ன வேலை என்பதைத் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெளிவுபடுத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சோபிக்கத் தவறியுள்ளார். முதல் போட்டியில் 5-வது இடத்திலும், இரண்டாவது போட்டியில் 6-வது இடத்திலும் களமிறக்கப்பட்டார். பந்துவீச்சிலும் அவர் எப்போது பயன்படுத்தப்படுவார்? என்பது குழப்பமான ஒன்றாக உள்ளது.

வாஷிங்டன் சுந்தர் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் முறையே 13 மற்றும் 1 ரன் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சைப் பொறுத்தவரை, இரண்டு போட்டிகளிலும் சேர்த்து வெறும் 7 ஓவர்கள் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. டெஸ்ட் தொடரிலும் அவரை 3-வது இடத்தில் இறக்கிவிட்டு, பின்னர் மாற்றினார்கள்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "ஒருமுறை வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுத்துவிட்டால், அவரை 'பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளராக' நடத்த வேண்டும். அவருக்கு முழுமையான ஓவர்களை வீச வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து பந்துவீசினால் மட்டுமே, அவருக்குத் தான் ஒரு பந்துவீச்சாளர் என்ற மனநிலை வரும். அதை விட்டுவிட்டு, சும்மா பேட்டிங் ஆட வைத்து, பெயருக்கு ஓரிரு ஓவர்கள் வீசக் கொடுத்தால், 'நான் அணியில் எதற்கு இருக்கிறேன்? நான் பவுலரா? பேட்ஸ்மேனா?' என்று அவர் தன்னைத் தானே தேடிக்கொண்டிருப்பார். அவரை அந்தக் குழப்பமான நிலையில் விடாதீர்கள்" என்று கம்பீருக்கு அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அஸ்வின், "ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்திய அணியால் ஆட்டத்தை சரியாக முடிக்க முடியவில்லை. ராய்ப்பூரில் 40 ஓவர்களுக்குப் பிறகு இந்தியா ரன் குவிக்கத் திணறியது. ஃபினிஷிங் ரோலுக்கு ஒரு ஸ்பின் ஆல்-ரவுண்டரை விட, நித்திஷ் குமார் ரெட்டி போன்ற வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரை முயற்சித்திருக்கலாம்" என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
பும்ரா, ஷமி போன்ற சீனியர் பவுலர்கள் இல்லாததால், இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் கூடுதலாக 30-40 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அஸ்வின் எச்சரித்துள்ளார்.