ராய்ப்பூர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வரலாற்று வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்த சிஎஸ்கே அணி வீரர் டெவால்ட் பிரெவிஸை, முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்தியா தோல்வியடைந்தாலும், பிரெவிஸின் ஆட்டத்தை அவர் பாராட்டி பதிவிட்டுள்ளார். ராய்ப்பூரில் நடந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை, தென்னாப்பிரிக்கா வெற்றிகரமாகத் துரத்தியது. இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என சமனானது.

தென்னாப்பிரிக்கா சேஸிங் செய்தபோது, கேப்டன் மார்க்ரம் சதம் அடித்திருந்தாலும், தேவைப்படும் ரன் ரேட் எகிறிக் கொண்டே இருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் இந்திய பந்துவீச்சைச் சிதறடித்தார்.
வெறும் 34 பந்துகளில் 54 ரன்கள் விளாசிய அவர், அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா என யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவரது இந்த அதிரடி ஆட்டம் தான் தென்னாப்பிரிக்காவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
பிரெவிஸின் இந்த ருத்ர தாண்டவத்தைப் பார்த்து மெய்சிலிர்த்த ரவிச்சந்திரன் அஸ்வின், தனது 'X' தளத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், "ப்ரெவ்-பால் (Brev-ball) ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்" என்று வர்ணித்துள்ளார்.
அதாவது, பிரெவிஸ் பேட்டிங் ஆடுவதைப் பார்ப்பது ஒரு பிரம்மாண்டமான சினிமா படத்தை பார்ப்பது போல விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கிறது என்று அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா தோற்றாலும், ஒரு கிரிக்கெட் ரசிகனாகத் தரமான ஆட்டத்தை அஸ்வின் அங்கீகரித்துள்ளார்.
இந்தப் போட்டியில், விராட் கோலி 102 ரன்கள் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்கள் எடுத்து அடித்த சதத்தால் இந்தியா 358 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். ஆனால், பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால், தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்தது.