சென்னை : இந்திய அணியின் எதிரி என இந்தியா ஏ அணியின் மேனேஜரை சமூக ஊடகத்தில் அறிமுகம் செய்து பேட்டி எடுத்து இருக்கிறார் அஸ்வின்.
அந்த நபரின் பெயர் பாப்பா வெங்கடேசன். அவர் ஆஸ்திரேலிய அணி, இந்தியா வரும் போதெல்லாம் அந்த அணியின் உள்ளூர் மேனேஜராக செயல்பட்டு வருபவர்.
அதே போல, 2023 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்த போதும் அந்த அணியின் உள்ளூர் மேனேஜராக பணியாற்றினார். ஆஸ்திரேலிய அணி 2023 உலகக்கோப்பை தொடரை வென்றதை அடுத்து அந்த அணியுடன் இருந்த நபர் என்பதால் அஸ்வின் அவரை இந்திய அணியின் எதிரி என வேடிக்கையாகக் கூறி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் தற்போது இந்தியா ஏ அணியின் மேனேஜராக நியமிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி வீரர்களுடன் இருக்கிறார். அங்கே தான் அஸ்வின் அவரை சந்தித்து, தன் யூட்யூப் சேனலுக்காக பேட்டி எடுத்தார். அஸ்வின் அப்போது, "இந்திய கிரிக்கெட் அணியின் எதிரிகளில் இவரும் ஒருவர். கடந்த மாதம் வரை, உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் உள்ளூர் மேனேஜராக இருந்தவர் இவர். ஏன் சார் இப்படி பண்ணீங்க?" என அவரிடம் வேடிக்கையாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பாப்பா வெங்கடேசன், "அந்த சம்பவம் நடக்கும் வரை என் வாழ்க்கை அமைதியாக இருந்தது. அதன் பின் என் மொத்த அமைதியும் போய்விட்டது" என ஆஸ்திரேலியா உலகக்கோப்பை வென்றதை குறிப்பிட்டார்.
அடுத்து அஸ்வின், "இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு மேனேஜராக இருந்தீர்கள். அவர்கள் எங்கே சென்றாலும் உங்கள் பெயரை கூப்பிட்டு பேசுவார்கள். இப்போது இந்தியா ஏ அணிக்கு மேனேஜராக இருக்கிறீர்கள். இது எப்படி இருக்கிறது?" என கேள்வி எழுப்பினார்.
"இப்போது தெரிந்த முகங்களுடன் பயணிப்பது நன்றாக உள்ளது" என்றார். அப்போது அஸ்வின், "நான் இவரை எப்படி பேட்டி எடுக்க அழைப்பது என யோசித்தேன். ஆடு தானாக வந்து மாட்டிக் கொண்டது" என்றார். "ஆமாம், பலியாடு தானாக வந்து மாட்டிக் கொண்டது" என அப்பாவியாக கூறினார் வெங்கடேசன்.