செஞ்சுரியன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் முக்கியமான டெஸ்ட் தொடரில் மோத உள்ளன.
அந்த தொடரின் முதல் போட்டி செவ்வாய் அன்று தொடங்க உள்ள நிலையில், அந்த போட்டியில் எந்த 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கினால் வெற்றி கிடைக்கும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-இல் விவாதம் நடந்தது.
அப்போது ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் - முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அணித் தேர்வு குறித்து விவாதம் செய்தனர். அப்போது கவாஸ்கர் அஸ்வினை களமிறக்க வேண்டும் என்றார். ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதற்கு நேர் மாறான கருத்தை கூறினார்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானத்தின் பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். பந்து நன்றாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகும். அதனால், வேகப் பந்துவீச்சாளர்கள் இங்கே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து உள்ளது.
அதே சமயம், இந்திய அணி எப்போதும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள், மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டே டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. சுனில் கவாஸ்கர் அதே போன்ற அணியையே தேர்வு செய்ய வேண்டும் என்றார். அதனால், அவர் அந்த விவாதத்தில் ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் என ஆறு பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த பின், பந்துவீச்சாளர்களாக அஸ்வின், ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமாரை தேர்வு செய்தார்.
ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியில் நிச்சயம் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் எனக் கூறினார். அதனால், ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டும் போதும் எனக் கூறிய அவர் ரவீந்திர ஜடேஜாவை மட்டும் தேர்வு செய்தார். இன்னொரு வேகப் பந்துவீச்சாளருக்கு இடம் அளிக்க வேண்டி அஸ்வினை நீக்கி விட்டார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்த இந்திய டெஸ்ட் அணியில் கவாஸ்கர் தேர்வு செய்த அதே ஆறு பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றனர். ஆனால், ஐந்து பந்துவீச்சாளர்களாக ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றனர்.