கட்டாக்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு, மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "வருண் சக்கரவர்த்தியை அதிகம் பயன்படுத்தி, அவரது பந்துவீச்சு ரகசியத்தை உடைத்துவிடாதீர்கள்" என்று அஸ்வின் அட்வைஸ் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஒரு 'மிஸ்டரி ஸ்பின்னராக’ இருக்கிறார். அவரது பந்து எந்தப் பக்கம் திரும்பும் என்று கணிப்பது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினம். சமீபகாலமாக இந்திய டி20 அணியில் முன்னணியில் இருக்கிறார்.
இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "வருண் சக்கரவர்த்தியை நாம் இந்தத் தொடரில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. அவரைப் பாதுகாத்து வைக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து விளையாடவுள்ளோம். அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையிலும் இந்த அணிகளை நாம் சந்திக்க நேரிடும்.
அதனால், இப்போதே அவரை அதிகம் ஆட வைத்தால், எதிரணிகள் அவரது பந்துவீச்சு நுணுக்கங்களைக் கணித்துவிடுவார்கள். வருண் சக்கரவர்த்தியின் பலமே அந்த மர்மம் தான். அதை உலகக்கோப்பை வரை நாம் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
2026 பிப்ரவரியில் இந்தியாவிலும் இலங்கையிலும் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. "வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் உலகக்கோப்பையில் ஒன்றாக இணைந்து ஆடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு பயங்கரமான கூட்டணியாக இருக்கும். ஆனால், இப்போதே அவர்கள் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து, எதிரணிகளுக்குப் பழக்கப்படுத்திவிடக் கூடாது.
எதிரணிகள் அவர்களைக் கணிப்பதற்கு நாம் நேரம் கொடுக்கக்கூடாது. அவர்கள் வருணுக்கு எதிராக எவ்வளவு அதிகமாக ஆடுகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அவரது பந்துவீச்சைப் புரிந்து கொள்வார்கள். மர்மம் என்பது மர்மமாகவே இருக்க வேண்டும்" என்று அஸ்வின் கூறி இருக்கிறார்.
அஸ்வின் இப்படிச் சொல்லியிருந்தாலும், இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்திக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ளதால் இந்திய அணி கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.