மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி 'ஒயிட்வாஷ்' ஆனதைத் தொடர்ந்து, அணியிலிருந்து மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டதுதான் தோல்விக்குக் காரணமா என்ற விவாதம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த, முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதற்கு 'நச்' என்று முகத்தில் அடித்தாற்போல பதிலடியைக் கொடுத்துள்ளார்.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் போன்ற ஜாம்பவான்கள் டெஸ்ட் அணியிலிருந்து விடைபெற வேண்டிய சூழல் உருவானது. ஆனால், இளம் படை தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்ததால், "பழைய அனுபவ வீரர்கள் அணியில் இருந்திருக்கலாமே" என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், நிர்வாகத்தின் மீது மறைமுகக் குற்றச்சாட்டை வைத்தார். "எதிர்காலம் குறித்த தெளிவு இல்லாததால்தான் நாங்கள் (ரோஹித், கோலி, அஸ்வின்) தனிப்பட்ட முறையில் ஓய்வு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று."
"ஒருவேளை சரியான பாதை இருந்திருந்தால், விராட் கோலியால் இளம் வீரர்களை உருவாக்கியிருக்க முடியும். ரோஹித்தாலும் அதை செய்திருக்க முடியும். என்னாலும் செய்திருக்க முடியும். அறிவைப் பகிர்வது மிக முக்கியம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அது பலவீனம் ஆகிவிட்டது. எங்களை அவசரப்பட்டு வெளியேற்றி விட்டார்கள்" என்ற தொனியில் அஸ்வின் வேதனையுடன் பேசினார்.
ஆனால், அஸ்வின் மற்றும் ரசிகர்களின் இந்தக் கருத்தை சுனில் கவாஸ்கர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், ஒரு நியாயமான கேள்வியை முன்வைத்தார். "ஓய்வு முடிவு என்பது அவர்கள் (வீரர்கள்) எடுத்தது. ஒருவேளை நிர்வாகம் அவர்கள் எதிர்காலம் குறித்து யோசிக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால், 'அவர்கள் இருந்திருந்தால் இந்தத் தொடரை வென்றிருப்போம்' என்று சொல்வதை ஏற்க முடியாது.
ஏனென்றால், ரோஹித், கோலி, அஸ்வின் என எல்லோரும் அணியில் இருந்தபோதுதானே நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றோம்? அப்போ என்னாச்சு? ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது? அதனால் அவர்களை ஓய்வு பெற வைத்துவிட்டார்கள் என்று பேசுவது தவறு. அவர்கள் இருந்திருந்தாலும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றிருக்க வாய்ப்புண்டு. இந்தப் பிரச்சனையை அப்படி அணுகக்கூடாது," என்று கவாஸ்கர் முகத்தில் அடித்தாற்போல கூறியுள்ளார்.
அஸ்வின் மற்றும் ரசிகர்களின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நியூசிலாந்து தொடரில் மூத்த வீரர்கள் இருந்தும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனதை கவாஸ்கர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதே சமயம், இந்தியாவின் தொடர் தோல்விகள் கம்பீரின் 'இளம் அணி' திட்டத்தின் மீது பெரிய கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் உண்மை.