செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி துவங்க சில மணி நேரம் இருக்கும் முன்பு ரவீந்திர ஜடேஜா சொன்ன தகவலால் கேப்டன் ரோஹித் சர்மாவின் திட்டம் அதிரடியாக மாறியது.
தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. அந்த தொடரின் முதல் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் துவங்கியது. அந்த மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் ஒரு சுழற் பந்துவீச்சாளருக்கு மட்டும் இடம் அளிக்க முடிவு செய்து இருந்தார் ரோஹித் சர்மா.

அஸ்வினை காட்டிலும், ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதால் அவரை அணியில் தேர்வு செய்ய ரோஹித் சர்மா திட்டமிட்டு இருந்தார். ஆனால், முதல் டெஸ்ட் துவங்க சில மணி நேரம் இருக்கும் முன்பு ஜடேஜா, தனக்கு முதுகில் வலி இருப்பதாக கூறி இருக்கிறார்.
இதை அடுத்து வேறு வழியின்றி ஜடேஜாவை நீக்கி விட்டு, அஸ்வினை அணியில் ஆட வைத்தார் ரோஹித் சர்மா. ரவீந்திர ஜடேஜா ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத ஆடுகளங்களில் கூட கட்டுக் கோப்பாக பந்து வீசும் ஆற்றல் கொண்டவர். குறிப்பாக மழைக்கு நடுவே நடக்கும் போட்டிகளின் போது, பிட்ச் ஈரத்தன்மையுடன் இருக்கும் போது விக்கெட் வீழ்த்தும் ஆற்றல் கொண்டவர்.
முதல் டெஸ்ட் போட்டியின் இடையே மழை வர வாய்ப்பு உள்ள நிலையில், ஜடேஜா முதல் டெஸ்ட்டில் ஆடாதது ஏமாற்றம் தான். ஜடேஜா அளவுக்கு பேட்டிங்கில் அஸ்வின் கை கொடுப்பாரா? என்பதும் ஒரு பிரச்சனையாக இருந்தது. ஆனால், மொத்த இந்திய பேட்டிங்கும் சரிவை சந்தித்தது தான் இதில் சோகம். இந்த நிலையில், இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்து ஏமாற்றம் அளித்தது. ஜெய்ஸ்வால் 17, ரோஹித் சர்மா 5, சுப்மன் கில் 2, கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31, அஸ்வின் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. ஒருவேளை ஜடேஜா இருந்திருந்தால் இதில் சிறிய மாற்றம் வந்திருக்கலாம்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி இருக்கும் இந்திய அணி -
ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா