ஜோஹன்னஸ்பெர்க் : ஜடேஜா பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் எட்ஜ் ஆகி கேட்ச் பிடிக்கப்பட்ட போதும் அம்பயர் அவுட் தர மறுத்தார். அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரிவ்யூ கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
அம்பயர் மற்றும் பந்தை எட்ஜ் செய்த டேவிட் மில்லர் இருவரும் சேர்ந்து இந்திய அணிக்கு விக்கெட் கிடைக்காமல் செய்தனர். பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆனால், பேட்ஸ்மேனுக்கு குறைந்த பட்சம் பந்து பேட்டில் பட்டதா என்ற சந்தேகேகமாவது இருக்கும். ஆனால், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து தன் விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார் மில்லர்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி பந்து வீசிய போது சில ஓவர்களுக்கு மட்டும் ரிவ்யூ வேலை செய்யாது என அம்பயர்கள் கூறினர். இதனிடையே தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்களை இழந்து இருந்தது. கலத்தில் இருந்த டேவிட் மில்லர் மட்டுமே முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தார்.
அப்போது ஜடேஜா வீசிய 9வது ஓவரின் நான்காவது பந்து டேவிட் மில்லர் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி, விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தார். ஆனால், களத்தில் இருந்த அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார். அப்போது இந்தியா ரிவ்யூ கேட்டு இருந்தால் அந்த விக்கெட் கிடைத்திருக்கும்.
ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்போது இந்திய அணி ரிவ்யூ கேட்க முடியாத நிலையில் சிக்கி அந்த முக்கியமான விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இழந்தது. டேவிட் மில்லரும் கூட பந்து எட்ஜ் ஆகி இருந்தாலும் ஒன்றும் தெரியாதது போல நின்று விட்டார். அதற்கு அடுத்த ஓவரில் இருந்து ரிவ்யூ பார்க்க வேண்டிய தொழில்நுட்பம் மீண்டும் வேலை செய்வதாக அம்பயர் அறிவித்தது தான் இதில் கொடுமை.
இந்தியா அந்த ஒரு விக்கெட் விஷயத்தில் ஏமாற்றப்பட்டாலும் இந்தப் போட்டியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஒருவேளை தோல்வி அடைந்து இருந்தால் இந்த விவகாரம் பெரிதாக வெடித்து இருக்கும். டேவிட் மில்லர் இந்த சம்பவத்தின் போது 18 ரன்கள் அடித்து இருந்தார். பின்னர் அவர் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.