கேபெர்ஹா : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் ரிங்கு சிங்கை நம்பாமல் ஜடேஜா செய்த செயலால் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்தது. தோல்விக்கு இதுவும் கூட ஒரு வகையில் காரணமாக அமைந்தது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு டிஎல்எஸ் முறையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இந்தியா கடைசி ஓவரில் இழந்த அந்த இரண்டு விக்கெட்கள் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு சற்று எளிதான வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. என்ன நடந்தது? ஜடேஜா செய்த தவறு என்ன?

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். மூன்றாம் வரிசையில் இறங்கிய திலக் வர்மா 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து 5.5 ஓவரில் ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர் முடியும் முன்பே ரிங்கு சிங் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
சூர்யகுமார் யாதவ் - ரிங்கு சிங் ஜோடி அபாரமாக அதிரடி ஆட்டம் ஆடியது. சூர்யகுமார் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் ஜிதேஷ் சர்மா 1 ரன்னில் வெளியேறினார். ஏழாம் வரிசையில் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். அவர் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார்.
ஆனாலும், ரிங்கு சிங் அவரைக் காட்டிலும் அதிரடியில் ஒரு அடி முன்னே இருந்தார். 19வது ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸ் அடித்து மிரட்டி இருந்தார் ரிங்கு சிங். அடுத்து கடைசி ஓவரின் முதல் பந்தை ரவீந்திர ஜடேஜா சந்தித்தார். ஒன்று அவர் சிக்ஸ், ஃபோர் அடிக்க வேண்டும் அல்லது ஒரு சிங்கிள் ரன் ஓடி பேட்டிங் ஸ்ட்ரைக்கை ரிங்கு சிங்கிற்கு வழங்க வேண்டும் என்பதே சரியான முடிவாக இருந்திருக்கும்.
கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த முயன்றார் ஜடேஜா. பந்து பவுண்டரி எல்லையை கடக்கவில்லை. அப்போது ஒரு ரன் ஓடியதோடு நிற்காமல், இரண்டாவது ரன் ஓடி வருமாறு ரிங்கு சிங்கிற்கு அழைப்பு விடுத்தார் ஜடேஜா. ஆனால், அப்போது ஒரு ரன் ஓடியதோடு நின்று, ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் ஆட வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அதை ஜடேஜா செய்யவில்லை.
அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 19.3 ஓவரில் இந்தியா 7 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் எடுத்து இருந்த போது மழை பெய்ததால் இந்தியாவின் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டு, தென்னாப்பிரிக்கா அணிக்கு டிஎல்எஸ் முறையில் 15 ஓவர்களில் 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஒருவேளை இந்திய அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்களை இழக்காமல் போயிருந்தால், தென்னாப்பிரிக்க அணிக்கு இன்னும் அதிக ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும். அதே போல ரிங்கு சிங்கிற்கு ஸ்ட்ரைக் கொடுக்கப்பட்டு, அதில் அவர் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தால் கடினமான இலக்கை பெற்று தென்னாப்பிரிக்க அணி சேஸிங்கில் தடுமாறி இருக்கும்.
டிஎல்எஸ் முறையில் இலக்கு நிர்ணயிக்கப்படும் போது விக்கெட் வீழ்ச்சி பெரிய அளவில் பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் இந்தியா சறுக்கியதற்கு காரணமே ஜடேஜா தான். ரிங்கு சிங் ஃபினிஷர் என்ற அடையாளத்தை பெற்று இருக்கும் நிலையில் அவர நம்பாமல் ஜடேஜா பேட்டிங் செய்ய முயன்றது தவறாக சென்று விட்டது.