டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 14 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்து ரசிகர்களிடையே ஏமாற்றியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

அதேபோல் அதிரடியாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்களை சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர், ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு ரிங்கு சிங் - ஜடேஜா இருவரிடமும் வழங்கப்பட்டது. அதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்களில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
கடைசி ஓவரில் ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்த ரிங்கு சிங், அவர் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2வது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோரும் குறைந்தது. கடைசி நேரத்தில் மழை பெய்ய தொடங்கியதால், இந்திய அணியின் ஆட்டம் 19.3 ஓவர்களுடன் நிறைவுக்கு வந்தது.
ஒருவேளை ஜடேஜா அடுத்த 2 பந்துகளில் ஒரு சிக்ஸ் அல்லது ஒரு பவுண்டரியை அடித்திருந்தால் கூட தென்னாப்பிரிக்கா அணிக்கு கொஞ்சம் கூடுதல் இலக்கை நிர்ணயிக்க முடிந்திருக்கும். ஆனால் ஜடேஜா வழக்கம் போல் ஃபினிஷர் என்ற பெயரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் ரிங்கு சிங்கை போல் ஜடேஜா விளையாட கற்று கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.