ராய்ப்பூர்: விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சதம் அடித்து, இந்திய அணிக்கு 358 என்ற இமாலய ஸ்கோரை பெற்றுக் கொடுத்தும், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், பனிப்பொழிவு ஒரு காரணம் என்றாலும், கடைசி நேரத்தில் பேட்டிங்கில் ஏற்பட்ட சறுக்கலே தோல்விக்கு முக்கியக் காரணம் என்பதை கூறினார்.
குறிப்பாக, கடைசி ஓவர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அதிரடி காட்டத் தவறியதே, இந்தியா 380-400 ரன்களை எட்ட முடியாமல் போனதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் மிடில் ஆர்டரில் அதிரடி ஃபினிஷர் ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாதது மிகப்பெரிய குறையாகத் தெரிந்தது. 39-வது ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 400 ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 11 ஓவர்களில் இந்தியா வெறும் 74 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஃபினிஷராகச் செயல்பட வேண்டிய ரவீந்திர ஜடேஜா, கடைசி கட்டத்தில் 27 பந்துகளைச் சந்தித்து வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 8 பந்துகளில் 1 ரன் எடுத்து வெளியேறினார். கேப்டன் ராகுல் மட்டும் 43 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். ஜடேஜா மட்டும் இன்னும் கொஞ்சம் வேகம் காட்டியிருந்தால், இந்தியா இன்னும் 20-30 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கும்.
தோல்வி குறித்துப் பேசிய ராகுல், "நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். 350 என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் பனிப்பொழிவு இருக்கும்போது பந்துவீச்சாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்க, இன்னும் ஒரு 20-25 ரன்கள் கூடுதலாகத் தேவைப்பட்டது. அதை நாங்கள் தவறவிட்டுவிட்டோம்," என்று கூறினார்.
மற்றொரு சுவாரஸ்யமான மற்றும் சோகமான விஷயம் என்னவென்றால், இந்திய அணி தொடர்ந்து 20-வது முறையாக 'டாஸ்' தோற்றுள்ளது. பனிப்பொழிவு இருக்கும் மைதானத்தில் டாஸ் வெல்வது மிக முக்கியம். ஆனால் அதிர்ஷ்டம் இந்தியா பக்கம் இல்லை.
"டாஸ் தோற்றது என் மீது எனக்கே கோபத்தை வரவழைக்கிறது. ஈரமான பந்தை வைத்துக்கொண்டு பந்துவீசுவது எவ்வளவு கடினம் என்பது தெரியும். நடுவர்கள் பந்தை மாற்றிக் கொடுத்தாலும், தென்னாப்பிரிக்கா சிறப்பாக விளையாடியது" என்று ராகுல் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா அணி 359 ரன்களை சேஸ் செய்து, இந்திய மண்ணில் அந்நிய அணி ஒன்று செய்த அதிகபட்ச சேஸிங் சாதனையைச் சமன் செய்துள்ளது. எய்டன் மார்க்ரம் (110), மேத்யூ பிரீட்ஸ்கே (68) மற்றும் டெவால்ட் பிரேவிஸ் (54) ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 எனச் சமன் செய்தது. டிசம்பர் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றி பெறும் அணியே கோப்பையைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.