மும்பை : ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் வீரராக இருப்பவர் சுப்மன் கில். டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் கில் பட்டையை கிளப்ப கூடிய வீரராக திகழ்கிறார்.
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கில் இல்லாமல் இந்திய அணியே இருக்காது என்ற நிலை தற்போது வந்திருக்கிறது. இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருக்கும் கில்லை தென் ஆப்பிரிக்கா தொடரில் தேர்வு குழு சேர்க்காததால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

தென்னாப்பிரிக்க போன்ற கடினமான ஆடுகளங்களில் விளையாடும் போது உலகின் நம்பர் ஒன் வீரர் கில் இருந்தால், அது அவருடைய எதிர்காலத்திற்கும் நல்லதாக இருக்கும் என்று குறிப்பிட்ட ரசிகர்கள் கில் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு ஒரு காரணம் இருப்பதாக தெரிகிறது.
நடப்பாண்டில் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதால் கில் டி20 அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை 2024 எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத ஆண்டாக கருதப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு இந்திய அணி நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால் தான் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் வெள்ளை நிற கிரிக்கெட்டில் விளையாடவில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள்.
இந்திய அணியை பொறுத்தவரை இந்த ஒரு நாள் போட்டிகளை விட அதன் பிறகு நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த தொடரில் புஜாரா, ரகானே போன்ற சீனியர் வீரர்கள் நீக்கப்பட்ட நிலையில் கில் தன்னுடைய திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டிகளில் கில், புஜாரா இடத்தில் களமிறங்கி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதனால் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக ஒரு நாள் தொடரில் இடம் பெறாமல் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி செய்ய இந்த நேரத்தை கில் பயன்படுத்துவார் என தெரிகிறது. பத்து நாட்களுக்கு முன்பு டெஸ்ட் அணியும் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து பயிற்சி செய்ய இருக்கிறது. இதனால் தான் டி20-ல் விளையாடும் கில், ஒரு நாள் போட்டியில் விளையாடாமல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் நோக்கில் தேர்வு குழுவினர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.