மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த தருணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிகிழமை கவுஹாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக கில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்கின்றார். முதல் டெஸ்ட் போட்டியிலும் பெரும்பாலான பகுதியில் ரிஷப் பண்ட்டே அணியை வழிநடத்தினார்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுவார் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கேப்டன் காயமடைந்த நிலையில் அவருக்கு பதில் பணி செய்வது என்பது எப்போதுமே கடினமான ஒரு விஷயமாகும் அதுவும் ஒரு போட்டியில் தோல்வியை தழுவி விட்டு இரண்டாவது டெஸ்டில் கேப்டனாக பொறுப்பேற்பது என்பது உண்மையிலே சிரமம்தான்.
ஆனால் ரிஷப் பண்ட், ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறார். விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டம் எவ்வாறு செல்கிறது என்பதை அவரால் உன்னிப்பாக கவனிக்க முடியும். எனவே அது அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக அணியை வழிநடத்திருக்கின்றார்.
டெல்லி அணிக்காகவும் சரி மற்ற அணிகளுக்காகவும் சரி அவர் கேப்டனாக நன்றாக செயல்பட்டுள்ளார். தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணியை எப்படி வழி நடத்துகிறார். ஒரு பேட்ஸ்மேனாக எப்படி தனது இன்னிங்ஸை கட்டமைக்க போகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன்.
அவர் கேப்டனாக சிறப்பாக தனது பணியை செய்வார் என்று நான் நம்புகிறேன். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என இந்தியா இவ்வாறு ஆடுகளத்தை தயார் செய்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆடுகளங்கள் எதிரணி ஸ்பின்னர்களுக்கும் உதவி செய்யும் என்பதை அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வது கிடையாது. ஆனால் ஒரு காலத்தில் அவர்கள் அப்படி கிடையாது. கடைசி இன்னிங்ஸில் 124 ரன்கள் என்பதை எளிதாக எட்டிருக்க வேண்டும். ஆனால் இது போன்ற ஆடுகளத்தில் ஒரு விக்கெட் இழந்தால் இரண்டு விக்கெட் இழந்து விட்டோம் என்று அர்த்தம்.
அந்த அளவுக்கு அழுத்தம் கடுமையாக இருக்கும். வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது வீரராக எந்த ஒரு தவறையும் முதல் டெஸ்டில் செய்யவில்லை. ஆனால் இந்தியாவுக்கு வெளியே மூன்றாவது வீரராக அவர் களமிறங்குவார் என்றால் அது தவறாக இருக்கும். இந்தியாவுக்கு பெரிய எதிரியே தென்னாப்பிரிக்க கிடையாது. அவர்களுடைய சொந்த பேட்டிங் தான் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.