கேபெர்ஹா : சிக்ஸ் அடித்ததால் வர்ணனையாளர்கள் அறையின் கண்ணாடி உடைந்த நிலையில், அதில் ரிங்கு சிங் மீது தவறே இல்லை என்ற போதும் அவர் மன்னிப்பு கேட்டு நெகிழ வைத்து இருக்கிறார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங் அபார ஆட்டம் ஆடி தன் முதல் சர்வதேச டி20 அரைசதம் அடித்தார்.
சூர்யகுமார் யாதவை தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில், ரிங்கு சிங் நிலையாக நின்று அவுட் ஆகாமல், அதிரடி ஆட்டம் ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் அடித்து இருந்தார்.

விக்கெட் இழக்காமல் ஆட வேண்டும் என்பதால் அதிகமாக ஃபோர் அடிக்கவே முயற்சி செய்தார். 9 ஃபோர் அடித்த அவர் இரண்டு சிக்ஸ் மட்டுமே அடித்து இருந்தார். அதில் ஒரு சிக்ஸ் நேராக அடிக்கப்பட்டது. அப்போது பந்து வர்ணனையாளர் அறையின் முகப்பு கண்ணாடியை தாக்கியதில், அந்த பலமான கண்ணாடி விரிசல் விட்டது.
இந்த சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் மத்தியிலும் பேசுபொருள் ஆனது. பலரும் ரிங்கு சிங்கின் சிக்ஸ் அடிக்கும் திறமையை புகழ்ந்தனர். இந்த நிலையில், போட்டி முடிந்த உடன் ரிங்கு சிங் பேட்டி அளித்த போது அவர் அடித்த சிக்ஸ் காரணமாக கண்ணாடி உடைந்ததை பற்றி அவரிடம் கூறினர்.
அதைக் கேள்விப்பட்ட உடன் ரிங்கு சிங், "நான் அந்த ஷாட் அடித்த போது அது சிக்ஸ்க்கு சென்றது. அந்த சிக்ஸ் கண்ணாடியை உடைத்தது பற்றி எனக்கு தெரியாது. அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். ஒரு வீரர் சிக்ஸ் அடித்து மைதானத்தில் இருக்கும் கண்ணாடி உடைவது சாதாரண விஷயம் தான். அதில் அந்த பேட்ஸ்மேன் மீது எந்த தவறும் இல்லை. ஆனால், அதற்கு கூட மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்கிற்கு சமூக ஊடகங்களில் மேலும் பாராட்டு குவிந்து வருகிறது.