மும்பை : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி ,ரெய்னா ஆகியோர் இந்திய அணியில் இருந்து விலக்கிய பிறகு நமக்கு ஒரு சரியான ஃபினிஷர் கிடைக்காமல் தடுமாறி வருகிறோம். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கும் ஒரு ஃபினிஷர் இல்லாததுதான் காரணம் என்ற விமர்சனமும் இருந்தது.
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய சூரியகுமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் அவர் பினிஷராக கொண்டுவரப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. மேலும் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை.

இதேபோன்று ரிஷப் பண்ட், பினிஷர் ஆக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒன்று இரண்டு போட்டிகளைத் தவிர பெரிய அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை. இந்த நிலையில் ரெய்னாவின் ஜெராக்ஸ் போல் ஒரு வீரரை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. அது வேறு யாரும் கிடையாது நம் ரிங்கு சிங் தான்.
ரெய்னாவை போலவே தன்னலம் இன்றி அதிரடியாக ஆடி அணிக்கு ரன்களை சேர்க்க வேண்டும் என ரிங்கு சிங் முயற்சி செய்து வருகிறார். இதுவரை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 4 இன்னிங்ஸில் இரண்டு முறை கடைசி ஓவரில் 20 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதனால் ரிங்கு சிங்கை முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா தொடரில் சேர்த்திருக்கிறது.
மேலும் இறுதியில் களமிறங்க வாய்ப்பு தரப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ரெய்னா விளையாடிய காலத்தில் எந்த இடத்தில் களமிறங்கினாரோ அதே இடம் தற்போது ரிங்கு சிங்கிற்கு கிடைத்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாத நிலையில் ரிங்கு சிங் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அவர் தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொள்வார்.
மேலும் இன்னும் பல நாட்களுக்கு நல்ல ஒரு ஃபினிஷராக திறம்பட வளர ரிங்கு சிங்குக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒருவேளை அவர் சோபிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கி அவரை அந்த இடத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்பதுதான் ராகுல் டிராவிட்டின் திட்டமாக இருக்கிறது. ஒருநாள் அணியில் ரெய்னாவின் இடத்திற்கு டிராவிட் சேர்த்து இருப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது.