கேபெர்ஹா : ரிங்கு சிங் அவுட்டே ஆகாத நிலையிலும் அம்பயர் தவறாக அவுட் கொடுத்தார். அப்போது ரிங்கு சிங் ரிவ்யூ கேட்காமல் தான் அவுட் தான் என அப்பாவியாக எண்ணி வெளியேற இருந்தார்.
எனினும், அப்போது களத்தில் இருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், அவரை ரிவ்யூ கேட்குமாறு கூறினார். பின்னர் ரிவ்யூவில் ரிங்கு சிங் அவுட் இல்லை என்பது தெரிய வந்தது. ஒருவேளை அப்போது ரிங்கு சிங் தான் அவுட் தான் என எண்ணி வெளியேறி இருந்தால் இந்தியா இந்தப் போட்டியில் போராடி தோற்றது என்ற நிலை கூட வந்திருக்காது. பேட்டிங்கின் போதே மோசமான நிலைக்கு சென்று இருக்கும்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. இரண்டாவதாக பந்து வீசுவது கடினம் என்ற நிலையில், இந்தியா முதலில் அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே இரண்டாவதாக பந்து வீசும் போது தென்னாப்பிரிக்க பேட்டிங்கை சமாளிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் இந்திய அணி 5.5 ஓவர்களில் 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அடுத்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் - ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து ஆடினர். 12வது ஓவரில் தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்கிரம் பந்து வீசினார். அப்போது ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற ரிங்கு சிங் காலில் பந்து பட்டது. மார்கிரம் எல்பிடபுள்யூ அவுட் கேட்ட உடன் அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். அப்போது 18 ரன்கள் அடித்து இருந்த ரிங்கு சிங் பந்து நேராக வந்ததை உணர்ந்து தான் அவுட் ஆகி விட்டோம் என எண்ணி ரிவ்யூ கேட்காமல் வெளியேற இருந்தார்.
அப்போது எதிரில் இருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங்கிடம் ரிவ்யூ கேட்குமாறு கூறினார். பந்து நேராக சென்றதால் ரிவ்யூவில் முடிவு மாற வாய்ப்பு இல்லை என்றாலும் பந்து கிளவுஸ் அல்லது பேட்டில் பட்டு இருக்கலாம் என சூர்யகுமார் கூறினார். அதன் பின்னர் அரை மனதாக ரிவ்யூ கேட்டார் ரிங்கு சிங். அப்போது பந்து கிளவுஸில் பட்டது தெரிந்ததால் அம்பயர் முடிவை மாற்றினார்.
அதன் பின் ரிங்கு சிங் தன் முதல் டி20 அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ரிங்கு சிங் 68 ரன்கள் அடித்து இருந்தார். ஒருவேளை தான் அவுட் என எண்ணி அவர் 18 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறி இருந்தால் இந்திய அணிக்கு பெரும் சிக்கல் ஆகி இருக்கும்.