சென்சுரியன்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் கடைசியாக விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் வெறும் 91 ரன்கள் மட்டுமே சேர்த்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரிங்கு சிங் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், சில சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. அதனை சரி செய்யவில்லை என்றால், வரும் நாட்களில் இந்திய அணியின் பாடு திண்டாட்டம் தான். இந்திய அணியின் நட்சத்திர ஃபினிஷராக உருவாகி வரும் ரிங்கு சிங் கடைசியாக விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் வெறும் 91 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
கடந்த சில தொடர்களாகவே ரிங்கு சிங்கிற்கு நிலையான பேட்டிங் ஆர்டரில் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நம்பர் 6 அல்லது நம்பர் 7 பேட்டிங் வரிசையில் களமிறங்கும் அவர், சில நேரங்களில் நம்பர் 4ல் வரிசையிலும் களமிறக்கப்பட்டு வருகிறார். ஏற்கனவே கடந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 113 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.
தற்போது இந்திய அணியிலும் ரிங்கு சிங் தொடர்ச்சியாக விளையாடினாலும் அவருக்கான முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் 2 முறை பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த போதும், அவர் வெறும் 28 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் கேதர் ஜாதவை போல் போதுமான வாய்ப்பு அளிக்கப்படாமலேயே வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.
டவுன் தி ஆர்டரில் ரிங்கு சிங் களமிறங்குவதால், அவருக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும், தோனியை போல் வெற்றிக்கு அருகில் சென்றால் கூட ரிங்கு சிங்கை களமிறக்க இந்திய அணி முன் வர வேண்டும் என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஏனென்றால் ஃபினிஷராக களமிறங்கும் வீரருக்கு தொடர்ச்சியாக கேம் டைம் கிடைப்பது அவசியமாகும்.