ஜோஹன்னஸ்பெர்க் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிங்கு சிங் அறிமுகமாக உள்ளதாக இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல் பேட்டியில் உறுதி செய்து இருக்கிறார்.
இந்திய ஒருநாள் அணியில் இருந்து மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா விலகி உள்ளனர். இப்போதைக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இளம் வீரர்கள் மற்றும் இதுவரை வாய்ப்பின்றி தவித்து வரும் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அந்த பட்டியலில் ரிங்கு சிங் முதல் இடம் பெற்று இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆக இருக்கிறார். இது வரை டி20 அணியில் மட்டுமே பங்கேற்று அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய ரிங்கு சிங்கிற்கு இது பதவி உயர்வாக அமைந்துள்ளது.

இந்திய அணியில் இடம் பெற வேண்டி பல நூறு வீரர்கள் வரிசையில் காத்துக் கொண்டு உள்ளனர். உள்ளூர் தொடர்களில் ரன் குவித்தும், விக்கெட்களை எடுத்தும், ஐபிஎல் தொடரில் தங்கள் திறமையை காட்டியும் இந்திய அணியில் இடம் இல்லாமல் பலர் தவித்து வரும் நிலையில், ரிங்கு சிங் காட்டில் மழை பெய்து வருகிறது.
ரிங்கு சிங் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தன் அதிரடி ஆட்டம் ஆடும் திறமையை உள்ளூர் தொடர்களில் காட்டி விட்டார். அதன் மூலம் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 2018 ஐபிஎல் ஏலத்தில் போட்டி போட்டு 80 லட்சம் கொடுத்து வாங்கியது. அங்கிருந்து துவங்கி சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார் ரிங்கு சிங்.
தான் ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் அணியின் தேவைக்கு ஏற்ப ஆடி இருக்கிறார். ஒரிரு போட்டிகளை தவிர பெரும்பாலான போட்டிகளில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில், அவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் ரிங்கு சிங் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.