கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவை திட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது நாள் ஆட்டத்தில் 247 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடங்கியது.
இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சேனுரான் முத்துசாமி சதம் விளாசி அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் அதிக ஓவர்களில் வீசி சோர்வடைந்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

இதனை பார்த்து கடுப்பான ரிஷப் பண்ட், ஐசிசி விதியை காட்டி குல்தீப்க்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் நேரத்தை வீரர்கள் வீணடிக்க கூடாது என்பதற்காக ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் வீச 60 வினாடிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி இருக்கிறது.
இந்த புதிய விதியின் படி இரண்டு முறை 60 வினாடிக்கு மேல் சென்றால் நடுவர்கள் வார்னிங் கொடுப்பார்கள். மூன்றாவது முறையாக இந்த தவறை செய்தால் ஐந்து ரன்கள் பெனால்டி வழங்கப்படும். இதனால் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவை திட்டினார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
அதில், நீ என்ன உங்க வீட்டில் விளையாடுகிறாய் என்று நினைக்கிறாயா ? பந்தை சீக்கிரமாக வீசு. இன்னும் 30 வினாடிகள் தான் இருக்கிறது. அதுவும் இல்லாமல் உனக்கு இரண்டு முறை நடுவர்கள் வார்னிங் கொடுத்து விட்டார்கள். இந்த ஓவரே எனக்கு தேவை இல்லை. நீ டெஸ்ட் கிரிக்கெட்டை அலட்சியம் செய்கிறாய்.
நான் பில்டிங்கை செட் செய்து கொள்கின்றேன். நீ பந்து வீசுவதை மட்டும் பார் மற்றதெல்லாம் தானாகவே நடக்கும் என்று குல்தீப் யாதவை ரிஷப் பண்ட் சாடினார். இதேபோன்று பில்டிங்கில் ஜெய்ஸ்வால் சரியாக செயல்படவில்லை என்று அவரை திட்டினார். ஆடுகளம் நினைத்த மாதிரி செயல்படவில்லை என்பதால் ரிஷப் பண்ட் கடுப்பாகி அனைத்து வீரர்களையும் திட்டி வருவதாக ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.