கவுகாத்தி: இந்திய டெஸ்ட் அணி, தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து, ஒயிட்வாஷ் ஆகி வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு இருக்கிறார் டெஸ்ட் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்.
இந்திய அணியின் தோல்விக்குத் தானே பொறுப்பேற்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரிஷப் பண்ட். அதேசமயம், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தோல்விக்குப் பொறுப்பேற்காமல் வீரர்களைக் குறை கூறிய நிலையில், பண்ட் கேப்டனாக முன்னின்று மன்னிப்புக் கேட்டிருப்பது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து தலைக்குனிவைச் சந்தித்துள்ளது. அதிலும் கடந்த ஓராண்டில் இரண்டு டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் இழந்து இருக்கிறது இந்திய அணி.
தோல்விக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் பண்ட், எந்த சாக்குப்போக்கும் சொல்லாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தனது பதிவில், "கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் போதுமான அளவு சிறப்பாக விளையாடவில்லை என்ற உண்மையை மறுக்கவோ, ஒளிக்கவோ முடியாது. ஒரு அணியாகவும், தனிப்பட்ட வீரர்களாகவும் எப்போதும் உயரிய தரத்தில் விளையாடி, கோடிக்கணக்கான இந்தியர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கவே விரும்பினோம்.
ஆனால், இந்த முறை உங்கள் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள். விளையாட்டு என்பது வெற்றியையும், தோல்வியையும் கற்றுக்கொடுக்கும். நாங்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எங்களை மாற்றிக்கொண்டு வளர்வோம்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், "இந்தியாவுக்காக விளையாடுவது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய கவுரவம். இந்த அணி எத்தகைய திறன் கொண்டது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து, கடினமாக உழைத்து, இன்னும் வலிமையாகத் திரும்பி வருவோம்" என்று உறுதியளித்துள்ளார்.
இந்தத் தோல்விக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோரின் அணுகுமுறையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தியாவின் படுதோல்விக்குப் பிறகு பேசிய கம்பீர், தனது வியூகங்கள், திட்டங்கள் எடுபடவில்லை என்றோ, பயிற்சியாளர் குழுவின் தோல்வி என்றோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மாறாக, ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதத்தை விமர்சித்து, "வீரர்கள் ரசிகர்களுக்காக விளையாடக் கூடாது" என்று பழிபோட்டார்.
ஆனால், தற்காலிக கேப்டனாக இருந்தபோதும், ரிஷப் பண்ட் எந்த ஒரு வீரரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறவில்லை. பிட்ச் சரியில்லை என்றோ, டாஸ் காரணம் என்றோ 'சப்பைக் கட்டு' கட்டவில்லை. "நாங்கள் சரியாக விளையாடவில்லை, என்னை மன்னித்துவிடுங்கள்" என்று தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்துள்ளார்.
ஒரு தலைவனாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட ரிஷப் பண்ட்டின் இந்த முதிர்ச்சியான செயல், அவர் மீதான மரியாதையை ரசிகர்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது. அதேசமயம், தோல்விக்குப் பொறுப்பேற்காத கம்பீர் மீது விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.