கொல்கத்தா: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸ் விளாசிய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் சேவாக் 91 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 39 ரன்களை சேர்த்தார். அதேபோல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் 2 சிக்சர்களை விளாசியதன் மூலமாக ரிஷப் பண்ட் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதாவது 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 8 சதங்கள், 18 அரைசதங்கள் உட்பட 3,454 ரன்களை விளாசி இருக்கிறார். அதில் 92 சிக்சர்களையும், 370 பவுண்டரிகளை பறக்கவிட்டுள்ளார். இந்தப் போட்டியில் 2 சிக்சர்களை விளாசியதன் மூலமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பாக 104 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள சேவாக், 91 சிக்சர்களை விளாசி அதிக சிக்ஸ் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தொடர்ந்து ரோகித் சர்மா 88 சிக்சர்களுடன் 2வது இடத்திலும், ஜடேஜா 80 சிக்சர்களுடன் 3வது இடத்திற்லும், தோனி 78 சிக்சர்களுடன் 4வது இடத்தில் இருந்தனர். தற்போது ரிஷப் பண்ட் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
சர்வதேச அளவில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 136 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட்க்கு 28 வயது மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், அவர் இந்தப் பட்டியலில் சர்வதேச அளவிலேயே விரைவில் முதலிடத்திற்கு முன்னேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.