கவுஹாத்தி: சுப்மன் கில்லிற்குப் பதிலாக இந்திய அணியை வழிநடத்தும் ரிஷப் பண்ட் கவுஹாத்தி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அமைத்த ஃபீல்டிங் வியூகம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குதல் ஆட்டத்திற்குப் பதிலாக, அவர் தற்காப்பு ஆட்டத்தைக் கையாண்டது முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக விலகியதால், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாகப் பொறுப்பேற்றார். போட்டியின் முதல் நாளின் முதல் செஷனிலேயே, தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு எதிராக அவர் அமைத்த ஃபீல்டிங் வியூகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து வர்ணனையில் பேசிய முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, ரிஷப் பண்ட்டின் வியூகத்தைக் கிண்டல் செய்தார். "லெக் சைடில் ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தால், ஒருநாள் போட்டிக்கான வியூகம் போல் உள்ளது. போட்டியின் முதல் நாளின் முதல் செஷனிலேயே டீப் ஸ்கொயர் லெக், லாங் ஆன் மற்றும் டீப் மிட்-விக்கெட் திசைகளில் ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் ஆட்டத்திற்குப் பதிலாக ஏன் இவ்வளவு தடுப்பு ஆட்டம்?" என்று கேள்வி எழுப்பினார்.
முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் ரிஷப் பண்ட்டின் முடிவை விமர்சித்தார். "மிட்-விக்கெட்டில் ஒரு ஆள், லாங்-ஆனில் ஒரு ஆள்... ஆனால் ஷார்ட் லெக்கில் ஆள் இல்லை. இது என்ன திட்டம்? எதிரணி வீரர் ரியான் ரிக்கல்டன் ஒன்றும் இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கும் வீரர் கிடையாது. விக்கெட்டுகளைத் தேடாமல், ரன்களைக் கட்டுப்படுத்த மட்டுமே முயல்வது, நவீன கால டெஸ்ட் கேப்டன்சி குறித்து நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையே காட்டுகிறது" என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், கழுத்து வலியால் அவதிப்படும் சுப்மன் கில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரிலும் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்குக் கூடுதல் ஓய்வு தேவைப்படுவதால், பிசிசிஐ அவரை அவசரப்படுத்த விரும்பவில்லை. எனவே, ஒருநாள் தொடருக்கும் ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மாவும் அணியில் இருப்பதால், தற்காலிகமாக அவரும் பரிசீலிக்கப்படலாம்.