கொல்கத்தா: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணி 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
ஆனால் தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 93 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று இருக்கிறது.தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் சைமன் ஹார்பர் நான்கு விக்கெட்டுகளும், கேசவ் மகாராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட்,இது போன்ற போட்டிக்கு பிறகு நாம் பெரிய அளவு யோசிக்க கூடாது.இந்த இலக்கை கண்டிப்பாக நாங்கள் எட்டிருக்க வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்க பவுலர்கள் எங்களுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள். எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இன்றைய ஆட்டத்தில் காலையில் தெம்பா பவுமா மற்றும் போஸ் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப் எங்களுடைய வெற்றியின் வாய்ப்பை வெகுவாக பாதித்தது.அது மட்டும் இல்லாமல் ஆடுகளத்தில் இருந்து பவுலர்களுக்கு நல்ல உதவி கிடைத்தது. எனவே இது போன்ற கட்டத்தில் 120 ரன்கள் என்ற ஸ்கோர் கூட இந்த ஆடுகளத்தில் எட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
அதே சமயம் நாங்கள் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து விளையாட வேண்டும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற வேண்டும். இன்னும் எந்த இடத்தில் நாங்கள் முன்னேற வேண்டும் என்பது குறித்து எல்லாம் நாங்கள் பேசவில்லை. ஆனால் அடுத்த போட்டிகளில் பலமான கம் பேக்கை கொடுப்போம் என்று நம்புகிறேன் என்று பண்ட் கூறியுள்ளார்.