கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் முழுமையாக இழந்து, சொந்த மண்ணில் முழுத் தொடர் தோல்வியை சந்தித்து, தலைகுனிவை சந்தித்துள்ளது இந்திய அணி. கவுகாத்தி டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பின் பேசிய தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட், தோல்விக்கான உண்மையான காரணத்தை வேதனையுடன் கூறினார்.
தோல்வி குறித்து ரிஷப் பண்ட் பேசுகையில், "இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். தென்னாப்பிரிக்கா எங்களை விடச் சிறப்பாக விளையாடியது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அவர்கள் இந்தத் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர்" என்று முதலில் எதிரணியைப் பாராட்டினார்.

தொடர்ந்து தோல்விக்கான காரணத்தை விளக்கிய அவர், "போட்டியில் சில சமயங்களில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்தோம். ஆனால் அந்த நல்ல தருணங்களை எங்களால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்றாலும், கிரிக்கெட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்றார்.
இந்திய அணி இந்தத் தொடரிலிருந்து என்ன கற்றுக்கொண்டது என்று கேட்டதற்கு, பண்ட் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். "இந்தத் தொடரிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட நேர்மறையான விஷயம் என்னவென்றால், நாங்கள் போட்ட திட்டங்களில் கவனம் செலுத்தி, அதைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான். ஒரு பேட்டிங் யூனிட்டாக, சரியான தருணங்களைப் பயன்படுத்தி ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்ப வேண்டும். ஒரு அணியாக நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம்" என்று வேதனையுடன் கூறினார்.
மேலும், "சொந்த மண்ணில் ஆடினாலும் சரி, வெளிநாட்டில் ஆடினாலும் சரி, கிரிக்கெட்டில் 100% அர்ப்பணிப்பும், கூடுதல் உழைப்பும் தேவை. அதை நாங்கள் கற்றுக்கொண்டு மீண்டும் வலுவாகத் திரும்ப வேண்டும்" என்றும் ரிஷப் பண்ட் குறிப்பிட்டார்.
இந்திய அணி சரியான திட்டங்கள் வகுத்தும், அதை களத்தில் செயல்படுத்தத் தவறியதே இந்த வரலாற்றுத் தோல்விக்குக் காரணம் என்பதை ரிஷப் பண்ட் தனது பேட்டியின் மூலம் கூறியுள்ளார். மிடில் ஆர்டர் சரிவு, பந்துவீச்சில் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாதது போன்ற தருணங்களில் இந்திய அணி கோட்டை விட்டதே, இந்த ஒயிட்வாஷ் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.