ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்ததாக ஒருநாள் தொடருக்குத் தயாராகி வருகிறது. ராஞ்சியில் தொடங்கியுள்ள ஒருநாள் தொடருக்கான பயிற்சி முகாமில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்களின் வருகை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்குத்தான் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ஜே.எஸ்.சி.ஏ. (JSCA) மைதானத்தில் வலைப்பயிற்சியைத் தொடங்கினர்.

இந்த ஒருநாள் தொடர் கவுதம் கம்பீருக்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்ததால் கம்பீர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் மற்றும் கோலி, இந்த ஒருநாள் தொடரில் மட்டும் சிறப்பாக ஆடி ரன் குவித்தால், அது கம்பீருக்கு எதிராகத் திரும்பும் அபாயம் உள்ளது.
"இவ்வளவு சிறப்பாக ஆடும் வீரர்களை ஏன் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற வைத்தீர்கள்? உங்கள் ஈகோ மற்றும் தவறான முடிவுகளால்தான் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகினார்கள். அதனால்தான் இந்தியா டெஸ்ட் தொடரில் மண்ணைக் கவ்வியது," என்று ரசிகர்கள் கம்பீரை வறுத்தெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
ரோஹித் - கோலி ஜோடி இந்தத் தொடரில் ஜொலித்தால், அது கம்பீரின் டெஸ்ட் அணித் தேர்வுக்கு எதிரான சாட்சியாக மாறிவிடும் என்பதே தற்போதைய சூழல்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் மீண்டும் சர்வதேசப் போட்டிக்குத் திரும்பியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோற்றாலும், கடைசிப் போட்டியில் ரோஹித் - கோலி ஜோடி அமைத்த பார்ட்னர்ஷிப்தான் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியைத் தந்தது. அந்த ஃபார்மை ராஞ்சியிலும் தொடர அவர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுப்மன் கில் காயம் காரணமாக விலகியுள்ளதால், இந்தத் தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாகச் செயல்படவுள்ளார். 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து ரோஹித் மற்றும் கோலி ஒவ்வொரு போட்டியிலும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள வீடியோவில், ரோஹித் மற்றும் கோலி வலையில் வியர்க்க விறுவிறுக்கப் பயிற்சி எடுக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. டெஸ்ட் தோல்வியின் சோகத்தை இந்த ஒருநாள் தொடர் வெற்றி மாற்றுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.