செஞ்சுரியன் : ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதைப் போலவே ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆட முயன்று சொதப்பி வருகிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாக அதிரடி ஆட்டத்துக்கு மாறி இருக்கிறார். துவக்க வீரராக களமிறங்கும் அவர் தொடர்ந்து ஒவ்வொரு ஓவரும் பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்.

வேகப் பந்துவீச்சாளர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்த ஷார்ட் பால்களை வீசுவார்கள். ஆனால், அப்படி வீசினால் புல் ஷாட் அடித்து அந்த பந்தை பவுண்டரியாக மாற்றுவார் ரோஹித் சர்மா.
புல் ஷாட் அடிப்பதில் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார் ரோஹித் சர்மா. ஆனால், அதே புல் ஷாட் தான் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஏழு முறை புல் ஷாட் ஆடி டெஸ்ட் போட்டிகளில் தன் விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அதே விஷயம் தான் நடந்தது. ரோஹித் சர்மா பேட்டிங் செய்த போது 5 ரன்கள் எடுத்த நிலையில், ரபாடா வீசிய ஒரு பவுன்சர் பந்தை எதிர்கொண்டு புல் ஷாட் அடித்தார். ஆனால், அது கேட்ச் பிடிக்கப்பட்டது. முதல் விக்கெட்ட்டாக ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.
இதை அடுத்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆட ஆசைப்பட்டு, பொறுப்பே இல்லாமல் அவுட் ஆகி இருக்கிறார் என அவரை விமர்சனம் செய்தனர். ஆனால், உண்மையில் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் பல நூறு முறை சரியாக அடித்த புல் ஷாட்டை தான் ரோஹித் சர்மா முயன்றார். ஆனால், டெஸ்ட் போட்டி சூழ்நிலைகளில் வேலை செய்யவில்லை. இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமாவது புல் ஷாட் அடிப்பதை ரோஹித் சர்மா நிறுத்திக் கொள்வதே சரியான முடிவாக இருக்கும்.
ரோஹித் சர்மா சொதப்பிய நிலையில் மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கே எல் ராகுல் பொறுப்பாக ஆடி 101 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் குவித்தது.